ஈரானில் மூன்று மரண தண்டனையில் இருந்து தப்பிய நபர் சிறையில் பரிதாப மரணம்!

அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்ட ஒருவர் உச்ச நீதிமன்றத்தால் மரண தண்டனையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், சிறையிலேயே மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஹிஜாப் விவகாரத்தில் கடந்த ஆண்டு ஈரானில் வெடித்த மக்கள் போராட்டத்தில் கைதான பலரில் ஜாவத் ரூஹி என்பவரும் ஒருவர். 35 வயதான இவரே தற்போது வலிப்பு நோயால் அவதிப்பட்டு சிகிச்சை பலனின்றி சிறையில் மரணமடைந்துள்ளார்.

ஆனால் ஜாவத் ரூஹி மரணத்தில் அதிகாரிகள் தரப்பு பொறுப்பேற்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. உரிய சிகிச்சை அளிக்கப்பட்டும் எதிர்பாராமல் மரணம் ஏற்பட்டுள்ளதாகவும் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியாழனன்று உத்தியோகப்பூர்வ தகவல் வெளியாகும் முன்னரே சமூக ஆர்வலர்கள் பலர் ஜாவத் ரூஹி மரணம் தொடர்பில் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளதுடன் நீதித்துறை மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் அவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டினார்.

ஈரானின் சிறப்பு காவல்துறை விசாரணையின் போது 22 வயதான மஹ்ஸா அமினி மரணமடைந்த சில நாட்களில் ரூஹி கைதானார். மஹ்ஸா அமினி மரணம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதுடன், பல மாதங்கள் போராட்டக்களமாக மாறியது. இந்த நிலையில் கலவரத்தை தூண்டியது பொது சொத்தை சேதப்படுத்தியது மற்றும் ஆர்ப்பாட்டத்தின் போது குர்ஆனை எரித்ததாகக் கூறப்படும் விசுவாச துரோகம் உள்ளிட்ட வழக்குகள் ரூஹி மீது பதியப்பட்டது.

ஆனால், ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட ரூஹி, அப்படியான எந்த செயலிலும் ஈடுபட்டவரல்ல என சமூக ஆர்வலர்கள் தரப்பு வாதிட்டுள்ளது. மேலும், ரூஹி கசையடிகள், கடும் குளிர் சித்திரவதை, மின்சார அதிர்ச்சி உள்ளிட்டைவைகளுக்கு ஆளானார் எனவும் பதியப்பட்டுள்ள குற்றங்களை ஒப்புக்கொள்ளும்படி கட்டாயப்படுத்த அவரது தலையில் துப்பாக்கியை வைத்திருந்தார்கள் எனவும் தகவல் கசிந்துள்ளது. குர்ஆனை எரித்ததாகக் கூறப்படும் விசுவாச துரோகம் உள்ளிட்ட குற்றத்திற்கு மூன்று மரண தண்டனை விதித்திருந்தனர். ஆனால் மே மாதம் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு, மறு விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!