ஏலத்திற்கு வரும் இளவரசி டயானாவின் உடைகள்!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பிரித்தானியாவின் மறைந்த இளவரசி டயானா அணிந்த 3 கவுன்கள் ஏலத்திற்கு வரவுள்ளன. அமெரிக்காவின் ஜூலியன்ஸ் என்ற ஏல நிறுவனம் ஒன்று பிரித்தானியாவின் மறைந்த இளவரசி டயானாவின் 3 கவுன் உடைகளை ஏலத்தில் விற்பனை செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.

கலிபோர்னியாவின் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் அடுத்த மாதம் 6ம் திகதி முதல் 8ம் திகதி வரை இந்த ஏலம் நடைபெறும் எனவும் ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த 3 கவுன்களில் இளவரசி டயானா அதிக முறை அணிந்த சிவப்பு நிற கவுன் சுமார் 4 லட்சம் அமெரிக்க டொலர் வரை அதிகபட்சமாக ஏலத்தில் விலை போகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது என ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

இளவரசி டயானா விபத்தில் உயிரிழப்பதற்கு முன்னதாக தொண்டு நிறுவனத்திற்காக தன்னுடைய 70 கவுன்களை 1997ம் ஆண்டு ஏலத்தில் விற்று இருந்தார்.

அவற்றில் 3 கவுன்களை எலன் பெத்தோ என்ற பெண்மணி ஏலத்தில் எடுத்து இருந்தார், ஆனால் அவர் சமீபத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து அவரிடம் இருந்த இளவரசி டயானாவின் ஆடைகள் தற்போது மீண்டும் ஏலத்திற்கு வந்து இருப்பதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!