தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனை சந்திப்பதற்கான அவசியம் தனக்கு இருக்கவில்லை என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, நீங்கள் கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளின் பின்னர், உங்கள் கட்சியின் தலைவர் மௌனம் சாதிக்கின்றார், கட்சி தலைவரை சந்திப்பதற்கான ஏற்பாடுகள் செய்துள்ளீர்களா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
அதற்கு பதிலளித்த முதலமைச்சர், கடந்த 07 ஆம் திகதி சந்திப்பதாக கூறியிருந்தார். ஆனால் இந்தியா சென்று விட்டதனால் சந்திக்க முடியவில்லை. ஆனால், பத்திரிகைக்கு கொடுத்த செய்தி அவருக்கு கோபம் ஏற்படுத்தியுள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன்.என்றார்.
மீண்டும் சந்திப்பதற்கு ஏற்பாடுகள் செய்துள்ளீர்களா என கேட்ட போது, தலைவர் சம்பந்தனை சந்திப்பதற்கான அவசியம் எனக்கு இருக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனா அல்லது வேறு நபர்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. கட்சியில் யார் தீர்மானங்கள் எடுப்பவராக இருக்கின்றாரோ அவரின் தீர்மானங்கள் ஏற்கனவே சொல்லப்பட்டு விட்டன. தலைவர் என்ற ரீதியில் சம்பந்தன் மௌனம் காப்பதனால், நன்மைகள் ஏற்படுமென்பதனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்றார்.
நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்ட நேரத்தில் தலைவர் சம்பந்தன் தானே உங்களுக்கு ஆதரவாக இருந்தார் என மீண்டும் ஊடகவியலாளார் கேள்வி எழுப்பினார்கள்.
பொது மக்கள் கொடுத்த அழுத்தங்களின் பின்னர், நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் ஏற்பட்டதனால், நடவடிக்கை எடுத்தார் என்றும் அவர் அதற்கு பதிலளித்தார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!