போர்க்குற்ற விசாரணைக்கு வெளியாட்கள் தேவையில்லை! – பிரதமர் ரணில் திட்டவட்டம்

இலங்கை படையினருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச தலையீடு அவசியம் இல்லை என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் நேற்றுமுன்தினம் உரையாற்றிய பின்னர் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கையின் தற்போதைய அரசாங்கம் 2015 இல் பதவியேற்ற பின்னர் ஜனநாயகத்தை மீள ஏற்படுத்தியுள்ளது. நீதித்துறை உட்பட பொது ஸ்தாபனங்களின் மீதான நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. நல்லிணக்கம் உட்பட யுத்தம் சம்பந்தமான விடயங்களிற்கு பெருமளவிற்கு தீர்வை கண்டுள்ளது.

படையினரிடமிருந்த பொதுமக்களின் நிலங்களை பொதுமக்களிடம் மீள கையளித்துள்ளோம் அதேவேளை இந்த விடயத்தில் தேசிய பாதுகாப்பிற்கும் முக்கியத்துவம் அளித்துள்ளோம்.

வெளிநாட்டு உதவிகளை நாங்கள் வரவேற்கின்றோம். போர்க் குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை இலங்கையின் நீதித்துறையே விசாரணை செய்வது சிறந்தது. எவரும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு நடவடிக்கைகளை பார்வையிடலாம். ஜெனீவா தீர்மானத்திற்கு அமைய மனித உரிமை பேரவையின் அமர்வுகளிற்கு அறிக்கைகளை சமர்ப்பித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!