சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபரிடம் ஐ.நா பொதுச்செயலர் கண்டிப்பு

சிறிலங்காவில் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

நேற்று முன்தினம் இரவு சிறிலங்கா அதிபருக்கும், ஐ.நா பொதுச்செயலருக்கும் இடையில் நடந்த தொலைபேசி உரையாடலின் போதே, ஐ.நா பொதுச் செயலர் இதனை வலிறுத்தியிருக்கிறார்.

இந்த தொலைபேசி உரையாடல் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன், நொவம்பர் 1ஆம் நாள், ஐ்நா பொதுச்செயலர் தொலைபேசி மூலம் பேசினார்.

சிறிலங்காவின் தற்போதைய நிலவரங்களை தான் கவலையோடு கவனித்து வருவதாகவும், இந்த நெருக்கடி நிலைக்குத் தீர்வு காண அனைத்து தரப்புகளுடனும், பேச்சுக்களை நடத்த ஏற்பாடு செய்வதற்கு உதவத் தயாராக இருப்பதாகவும், சிறிலங்கா அதிபருக்கு, ஐ.நா பொதுச் செயலர் தெரிவித்தார்.

அமைதி, பாதுகாப்பை உறுதி செய்கின்ற சட்டத்தின் ஆட்சியை மதிக்கின்ற, அரசாங்கத்தின் பொறுப்பையும் அவர் வலியுறுத்தினார்.

நாடாளுமன்ற நடைமுறைகளை மாற்றியமைத்து, கூடிய விரைவில் நாடாளுமன்றத்தை வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபரிடம், ஐ.நா பொதுச்செயலர் கேட்டுக் கொண்டார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவை தீர்மானங்களின் அடிப்படையில், மனித உரிமைகள், நீதி, நல்லிணக்கம் தொடர்பாக முன்னைய வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றுவதை ஊக்குவிப்பதாகவும், ஐ.நா பொதுச்செயலர் தெரிவித்துள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது,

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!