வாக்கெடுப்பு நடக்காது, ஒத்திவைக்கப்படும்! – என்கிறார் லக்ஷமன் யாப்பா

நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 14ஆம் திகதி ஜனாதிபதியின் அக்கிராசன உரை மட்டுமே இடம்பெறும் என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்தன, அத்துடன், அன்றையதினம், நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதோடு, எதிர்வரும் 14ஆம் திகதிக்குப் பின்னரான, நாடாளுமன்ற அமர்வுகள் குறித்து கட்சித் தலைவர்கள் கூடி ஆராய்வார்கள் என்றார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவை பிரதமராக நியமித்ததை சவாலுக்கு உட்படுத்தி, இதுவரையில் எவரும் உயர் நீதிமன்றத்துக்கு செல்லவில்லை எனக் குறிப்பிட்ட அவர், ஜனாதிபதி எடுத்துள்ள தீர்மானம் தவறானதா? சரியானதா? என்பது குறித்த சர்வஜன வாக்கெடுப்புக் செல்வதற்கான அதிகாரம் ஜனாதிபதியிடம் காணப்படுவதாகவும் எடுத்துரைத்தார்.

ஜனாதிபதியின் உத்தரவை மீறி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிகாரம் சபாநாயகருக்கு இல்லை. பெரும்பான்மை நிரூபிப்பது, பிரதம​ருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவருவது போன்ற எந்தவொரு செயற்பாடுகளும் எதிர்வரும் 14ஆம் திகதிக்கான நாடாளுமன்ற ஒழுங்குப் பத்திரத்தில் குறிப்பிடப்படவில்லை என்றும் தெரிவித்த அவர், 14ஆம் திகதியன்று நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஒத்திவைக்கப்படும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!