சவுதி அரேபிய துணை தூதரகத்தில் நிருபர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்று சவுதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகை நிருபர் ஜமால் கசோக்கி (56). அமெரிக்க குடியுரிமை பெற்றவர். இவர் துருக்கியில் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் கடந்த அக்டோபர் 2-ந்தேதி நடந்தது.
தொடக்கத்தில் அவர் மாயமானதாக கூறப்பட்டது. துருக்கி மற்றும் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை தொடர்ந்து அவர் படுகொலை செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மயக்க மருந்து கொடுத்து கொலை செய்து பின்னர் அவர் உடல் உறுப்புகள் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்டது தெரிய வந்தது.
இந்த கொலையில் சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு தொடர்பு இருப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. அதை சவுதி அரேபிய அரசு மறுத்துள்ளது.
இதுகுறித்து அரசு வக்கீல் அலுவலக செய்தி தொடர்பாளர் ஷாலன் அல்-ஷாலன் அமெரிக்க பத்திரிகைக்கு பேட்டி அளித்தார். அதில் இந்த கொலைக்கும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இந்த வழக்கை சவுதி அரேபிய உளவுத்துறையின் துணை தலைவர் ஜெனரல் அகமது அல்-அஸ்சிரி தலைமையிலான குழு விசாரித்து வருகின்றனர்.
இக்கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்படும். மேலும் 21 பேர் போலீஸ் பாதுகாப்பில் வைத்து விசாரிக்கப் படுவார்கள். அவர்களில் 11 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!