சவுதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியின் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் சவுதி இளவரசருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என சவுதியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அடோல் அல்-ஜுபேர் தெரிவித்துள்ளார்.
கஷோக்கி கடந்த ஒக்டோபர் இரண்டாம் திகதி துருக்கியின் இஸ்தான்புல் நகரிலுள்ள சவூதி தூதரகத்தில் வைத்து கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை தன்னால் வெளியிடப்பட்ட அறிக்கையில், கஷோக்கியின் கொடூர படுகொலை குறித்து சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் நன்றாக அறிந்துள்ளதை தன்னால் அறியமுடிவதாக குறிப்பிட்டு அவர் அந்தப் படுகொலைக்கு உத்தரவிட்டோ அன்றி உத்தரவிடாமலோ இருந்திருக்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.
அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவான சி.ஐ.ஏ. இந்தப் படுகொலை குறித்து 100 சதவீதம் உறுதிப்படுத்தவில்லை எனக் கூறியுள்ளது.
ட்ரம்ப் அந்த அறிக்கையில், உலகம் மிகவும் அபாயகரமான இடமாகவுள்ளது. சவூதி அரேபியா, ஈரானுக்கு எதிராக அமெரிக்காவின் நட்பு நாடாகவும் உள்ளது. ஈரானியர்கள் அமெரிக்கர்கள் பலரையும் அப்பாவி மக்களையும் கொன்று வருகின்ற நிலையில் சவூதி அரேபிய அரசாங்கமானது மத்தியகிழக்கு எங்கும் அடிப்படைவாத மதத் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்திற்காக பில்லியன்கணக்கான பணத்தைச் செலவிட்டு வருகிறது எனத் தெரிவித்துள்ளார்.
இந் நிலையில் இது குறித்து தெரிவித்த சவுதி வெளியுறவுத்துறை அமைச்சர் அடேல் அல்ஜுபேர்,
எங்கள் தலைமை யாராலும் நீக்கி முடியாத உயரத்தில் உள்ளது. மன்னர் சல்மானும், இளவரசர் முகமது பின் சல்மானும் அவ்வாறான நிலையில் உள்ளவர்கள்.
அதனால் எங்கள் மன்னர் அல்லது பட்டத்து இளவரசரை இகழ்வது போன்ற எந்த விவாதத்தையும் எங்களால் பொறுத்துக் கொள்ள முடியாது.
இந்த கொலை தொடர்பான விசாரணைகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு காரணமானவர்களை நாங்கள் தண்டிப்போம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!