யாழ்ப்பாண பல்கலைக்கலைக் கழகத்தின் வவுனியா வளாக சிங்கள மாணவர்களின் செயற்பாட்டை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என்று தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா.
வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை ஒன்றை
நிறுவுவதற்கு நேற்று முன்தினம் முற்பட்டனர். நிர்வாகம் அதற்கு அனுமதி வழங்கவில்லை. ஊழியர்களைப் பூட்டி வைத்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். பொலிஸாரின் தலையிட்டால் ஊழியர்கள் விடுவிக்கப்பட்டனர். வளாகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டதுடன் வளாகமும் இழுத்து மூடப்பட்டது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்தபோதே நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராஜா மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்தாவது-,
இந்தச் சம்பவம் தொடர்பில் கவலையடைகின்றோம்.
பல்கலைக் கழகங்களிலோ பொது இடங்களிலோ மத இன ரீதியான சிலைகள் வைக்கும் போது அவற்றின் நிர்வாகங்களிடம் முறையான அனுமதி பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். வவுனியா வளாகத்தில் சிங்கள மாணவர்கள் புத்தர் சிலை நிறுவ முயற்சித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட பதற்றத்தால் வளாகம் காலவரையறையின்றி மூடப்பட்டுள்ளது.
இன, மத ரீதியான முரண்பாடுகளை அடுத்து பல்கலைக்கழகம் வரையறையின்றி முடப்படுவது அனுமதிக்கமுடியாதது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகின்றது.
இன, மதங்களுக்கிடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படும். இது நாட்டில் பெரும் குழப்பங்கள் ஏற்பட வழிவகுக்கும். உயர் கல்வி அமைச்சும் தலைமை அமைச்சரும் குறிப்பிட்ட வளாகத்துடன் பேச்சு நடத்திச் சுமுகமான முடிவு எட்டப்பட வேண்டும்.
அதேவேளை, வவுனியா மாவட்டச் செயலகத்திலும், புத்தர் சிலை நிறுவ மாவட்டச் செயலர் நடவடிக்கை எடுத்திருந்தார். அது அங்கே குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. மாவட்டத்தின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இது தொடர்பில் ஆராய்ந்திருந்தோம். இதன் பின்னர் அந்த நடவடிக்கை நிறுத்தப்பட்டிருந்தது – என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!