நாடாளுமன்ற கலைப்பு – திங்களன்றே உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு?

நாடாளுமன்றத்தைக் கலைத்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வெளியிட்ட அரசிதழ் அறிவிப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று அறிவிக்கப்படமாட்டாது என்று தகவல்கள் தெரிவிக்கி்ன்றன.

இந்த மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று நான்காவது நாளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக, இந்த மனுக்கள் மீது மூன்று நாட்கள் விசாரணை நடத்தப்படும் என்றே அறிவிக்கப்பட்டது. அதனால், இன்று 7ஆம் நாள் வரை அரசிதழ் அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

எனினும், நேற்றைய மூன்றாவது நாள் விசாரணையின் முடிவில், இன்றும் விசாரணை தொடரும் என்று அறிவித்திருந்த உச்சநீதிமன்றத்தின் 7 நீதியரசர்களைக் கொண்ட குழாம், இந்த இடைக்காலத் தடை உத்தரவை நாளை 8 ஆம் நாள் வரை நீடித்திருந்தது.

இந்த நிலையில் இன்று நான்காவது நாளாகவும் விசாரணைகளை முன்னெடுத்து வரும், உச்சநீதிமன்றம், அரசிதழ் அறிவிப்பு மீதான இடைக்காலத் தடை உத்தரவை எதிர்வரும் 10ஆம் நாள் வரை நீடித்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதனால் இந்த மனுக்கள் தொடர்பான இறுதித் தீர்ப்பு வரும் திங்கட்கிழமையே அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, மதிய இடைவேளைக்குப் பின்னரும், உச்சநீதிமன்ற நீதியரசர்கள் குழாம் விசாரணைகளை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!