தாயக மீட்புக்கான ஆயுதப் போராட்டம் உலக நாடுகளின் ஆதரவுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. போரில் தமது பிள்ளைகளை மாவீரர்களாகக் கொடுத்த பெற்றோர், உறவினர்கள், போரைத் தாங்கிய போராளிகள், மக் கள் அனைவரதும் மன எண்ணங்களைப் புரிந்து அனைவரும் முள்ளிவாய்க்கால் மண்ணில் மே – 18 அன்று ஒன்றிணைய வேண்டும்.
இவ்வாறு வடக்கு மாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். மே-18 ரணங்களைச் சுயலாப அரசியல் ஆக்காதீர்கள் என்று அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிபிட்டுள்ளார். அதில் உள்ளதாவது,
ஈழத் தமிழர்களின் தாயக மீட்புப் போராட்டம் 21 நாடுகளின் ஆதரவுடன் குறிப்பாக இந்தியா, சீனா போன்ற நாடுகளின் ஆதரவுடன் முள்ளிவாய்க்கால் மண்ணில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.
போரில் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை எந்தத் தமிழனும் வரலாற்றில் மறக்க முடியாத – மன்னிக்க முடியாத – ஆறாத வடுவாகப் பதிந்துள்ளது.
ஆயிரக் கணக்கானோர் கையிழந்து, கால் இழந்து, முள்ளந்தண்டுப் பாதிப்புக்குள்ளாகி இன்றுவரை மீளமுடியாத சுமைக்குள் தள்ளப்பட்டு வறுமைக்குக்குள் முடக்கப்பட்டுள்ளனர்.
பொருளியல் நோக்கில் சொல்லப்போனால் வாழ்வாதாரத்துக்காக – வாழும்வரை வாழுவோம் எனும் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
போரால் பாததிக்கப்பட்டு முகாம்களில் பல இன்னல்களை அனுபவித்தும், மீள்குடியமர்ந்தும் இன்றுவரை மீள்எழுச்சிக்கான உதவிகள் இன்றிக் கண்ணீருடன் மக்கள் வாழ்கின்றமையையும் காண்கின்றோம்.
இந்தப் பின்புலத்தில் மே-18 நிகழ்வை நடத்த ஏற்ற இறக்கங்களைக் காட்டி விமர்சிப்பது இனத்துக்கும், ஒன்றுமைக்கும் ஆரோக்கியமானதல்ல. நாகரீகமானதும் அல்ல.
சக்திமிக்க தமிழர்கள் அனைவரையுமு் நினைவுகூரும் நாளில் ஒன்றித்துச் செயற்படுவதே எதிர்காலத்தில் எம் இனத்தின் தாயக விடுதலை விடியலுக்காகப் பக்கபலமாக இருக்கும்.
வெளிச் சக்திகளுக்கு இடங்கொடுக்காது தாயக பூமியில் வாழும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களும், உறவுகளும் கட்சி பேதமின்றி இதயசுத்தியுடன் செயற்படுவதுதான் இனத்தின் இருப்பை உறுதி செய்யும்.- என்றுள்ளது.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!