ரணில் விக்கிரமசிங்க மீதான நம்பிக்கைப் பிரேரணைக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஐதேக எந்த இரகசிய உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை என்று அந்தக் கட்சியின் பிரதி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நேற்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
“கூட்டமைப்புடன், ஐதேக இரகசிய உடன்பாடு செய்துள்ளதாக சிலர் கூறுகின்றனர். ஆனால், நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எந்த உடன்பாட்டையும் செய்து கொள்ளவில்லை.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்ய வேண்டியது எமது தார்மீக கடமை.
கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் போர் முடிந்த உடனேயே வடக்கு -கிழக்கில் அபிவிருத்தியை மேற்கொண்டிருக்க வேண்டும். கடந்த 3 ஆண்டு காலத்தில் எம்மாலும் அதனை மேற்கொள்ள முடியாமல் போய்விட்டது.
வடக்கு – கிழக்கில் அபிவிருத்தியையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டியது எமது கடமை.
அதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் எந்த உடன்பாடும் செய்து கொள்ளப்படவில்லை. எமக்கான கடமை என்ற ரீதியில் அதனை நிறைவேற்றுவோம்” என்று தெரிவித்தார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!