47 நாட்களில் நாட்டை மைத்திரி நாசமாக்கிவிட்டார் – யாருக்கும் ஆதரவு இல்லை – ஜே.வி.பி

கடந்த 47 நாட்கள் நாட்டினையும் நாட்டு மக்களையும் நெருக்கடிக்கு தள்ளி ஜனாதிபதி சூழ்ச்சி செய்துவிட்டார். எவ்வாறு இருப்பினும் உடனடியாக அரசாங்கம் ஒன்றினை அமைத்து இடைக்கால வரவுசெலவு திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என ஜே.வி.பி வலியுறுத்துகின்றது. பாராளுமன்றத்தில் எந்த கட்சி ஆட்சியமைக்கவும் எமது ஆதரவை வழங்க மாட்டோம் எனவும் அக்கட்சி கூறுகின்றது.

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ஜே.வி.பி.யின் ஊடகப்பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான விஜித ஹேரத் இதனைக் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

ஜே.வி.பி முன்வந்து மைத்திரியின் சூழ்ச்சியை தோற்கடித்துவிட்டது. அதேபோல் எமக்கு செய்ய வேண்டிய முக்கிய கடமைகள் சில உள்ளன. குறுகிய காலத்தில் விசாரணை ஆணைக்குழு அமைக்க வேண்டும். நிறைவேற்று அதிகாரத்தை நீக்குதல், வெகு விரைவில் தேர்தலுக்கு செல்ல வேண்டும். இதுவே எமது நிலைப்பாடு.

அதேபோல் குறுகிய காலத்துக்கான ஆட்சியை எவரும் அமைத்து மக்களின் இன்றைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை. மக்களுக்காக என்றும் நாம் எமது போராட்டத்தை முன்னெடுப்போம். அடுத்த திங்கட்கிழமையில் இருந்து மக்களின் இணைக்கும் எமது பல்வேறு போராட்டங்கள், வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது. நாளை கிருலப்பனையில் மக்கள் பேரணி ஆரம்பிக்கப்படுகின்றது. இதில் எம்மை ஆதரிக்கும் அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்ற அழைப்பையும் விடுகின்றோம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!