தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்குகிறார் ரணில்

தேசிய ஜனநாயக முன்னணி என்ற புதிய அரசியல் கூட்டணியை உருவாக்கி, எதிர்வரும் தேர்தல்களைச் சந்திக்கவுள்ளதாக, ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

காலிமுகத்திடலில் நேற்று பிற்பகல் நடத்திய பாரிய பேரணியில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

”வரும் 21ஆம் நாள், ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில், தேசிய ஜனநாயக முன்னணியை உருவாக்குவது தொடர்பாக, முடிவெடுக்கப்படும்.

இதன் பின்னர் தேர்தல் திணைக்களத்தில் இந்தக் கூட்டணி பதிவு செய்யப்படும்.

நிறைவேற்று அதிகார அதிபர் ஆட்சி முறையை ஒழிப்பதற்கு வரும் பொதுத் தேர்தலில், புதிதாக உருவாக்கப்படும் கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை மக்கள் தர வேண்டும்.

ஒருமித்த நாட்டுக்குள் நல்லிணக்கத்துடன் அனைவரும் வாழக் கூடிய வகையில் அரசியல் தீர்வு ஒன்றைக் கொண்டு வருவது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபியுடன் பேச்சுக்கள் நடத்தப்படும்.” என்றும் அவர் கூறினார்.

காலிமுகத் திடலில் நேற்று நடத்தப்பட்ட பாரிய பேரணியில் சுமார் 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பங்பேற்றனர் என்று, ஐதேக தலைவர்களில் ஒருவரான எரான் விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!