“தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையில் சுமந்திரன்”

புதிய அரசியலமைப்பின் சட்டமூலம் எதிர்வரும் பெப்ரவரியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படுவதாக தெரிவிப்பதில் எந்த உண்மையும் இல்லை. தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையையே சுமந்திரன் மேற்கொண்டுவருகின்றார். இவரின் நடவடிக்கைகள் பிரபாகரன் மேற்கொண்டுவந்த பிரசாரங்களையும் விட ஆபத்தானது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சுதந்திர ஊடக கேந்திர நிலையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையில்லேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய தேசிய கட்சி, தமிழ் தேசிய கூட்டமைப்பு இணைந்து அரசியலமைப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டுவருவதாக சுமந்திரனின் பிரசாரம் தமிழ் மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். அத்துடன் அவரின் பேச்சுக்கள் தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களின் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை பிளவுபடுத்தக்கூடியதாகும். அவரின் இந்த செயல் விடுதலைப்புலி இயக்கத்தின் தலைவரான பிரபாகரனின் பிரசாரங்களையும்விட ஆபத்தானது. இதனை அவர் நிறுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!