இலங்கையின் அரசியல் சுயாதீனத்தில் தலையீடு செய்ய பிரிட்டனுக்கும் மேற்குலக நாடுகளுக்கும் என்ன அதிகாரம் உள்ளது? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில. நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி மக்கள் ஆணையால் தெரிவுசெய்யப்பட்ட எமது ஜனாதிபதி, புதிய பிரதமரை நியமித்தபோதும், நாடாளுமன்றத்தை ஒத்திவைத்தபோதும், உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரும் பல சந்தர்ப்பங்களிலும் நேரடியான தலையீடுகளைச் செய்ததுடன், கடும் அழுத்தங்களையும் கொடுத்தனர். பிரிட்டன் தூதுவர் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கூறியிருந்தார். நாடாளுமன்றத்தை 2 மாதங்களுக்கு ஒத்திவைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது. இதேபோன்று பிரிட்டன் மகாராணி எலிசபத்துக்கும் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரம் அந்த நாட்டின் அரசமைப்பின் பிரகாரம் உள்ளது.
அவர் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் சந்தர்ப்பங்களில் ஏன் நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கின்றீர்கள்? உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டுங்கள் என்று எம்மால் கோர முடியுமா?. எவ்வாறு சுயாதீனமான ஒரு நாட்டின் விடயதானங்களில் தலையீடு செய்ய முடியும்?.
நாடாளுமன்றில் மகிந்த ராஜபக்ச அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று சபாநாயகர் கூறியபோது மேற்குலக நாடுகளின் தூதுவர்கள் மேலே துள்ளிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒரு கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்றதும் அவர்கள் எவ்வாறு மகிழ்ச்சியடைய முடியும்?. அவர்கள் அவர்களது நாட்டுக்காக தான் இங்கு செயற்பட முடியும்.
மேற்குலகின் மறுவடிமே ஐ.தே.கவின் ஆட்சி. இது மிகவும் அச்சுறுத்தலானது. இலங்கையின் அரசியல் நடவடிக்கைகளில் மேற்குலக நாடுகள் இவ்வாறு தலையீடு செய்துள்ள வரலாறு இதற்கு முன்பு எப்போதும் இடம்பெறவில்லை. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாக முன்னர் உயர்நீதிமன்றம் எவ்வாறு செயற்பட வேண்டுமென மேல்குலக நாடுகளின் தூதுவராலயங்கள் கருத்துகளை வெளியிட்டிருந்தன. அமெரிக்க, இந்தியா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு தொலைபேசி அழைப்புகள் வருகின்றன.
இவ்வாறு 67 தொலைபேசி அழைப்புகள் வந்திருந்தன. எனவே, இன்று இலங்கையில் இடம்பெறும் மேற்குலக நாடுகளின் செயற்பாடுகள் கடும் அச்சுறுத்தலானவை என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!