வெளிநாட்டில் வாழும் இலங்கையர்களுக்கு நிரந்தர வதிவிட விசா!

இரட்டைப் பிரஜாஉரிமையை அங்கீகரிக்காத நாடுகளில் வாழும் இலங்கையர்களுக்காக, நிரந்தர வதிவிட விசாவை வழங்க, குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்திருப்பதாக, திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர்களில் ஒருவரான சமிந்த ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

இத்தகைய இலங்கையர்களின் அறிவையும், ஆற்றல்களையும் நாட்டின் அபிவிருத்தியில் இணைத்துக் கொள்வதே, இத் திட்டத்தின் நோக்கமாகும். இவ்வாறான நிரந்தர வதிவிட வீசாவைப் பெற்றுக்கொள்வதன் மூலம், வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் பல உரிமைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இதன் பிரகாரம், இலங்கையில் முதலீடு செய்தல், காணிகளை கூலிக்குப் பெற்றுக்கொள்ளுதல் போன்ற அனுகூலங்கள் முக்கியமானவையாகும் என்றும், ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இரட்டைப் பிரஜாவுரிமை கோரிய மேலும் ஆயிரம் பேருக்கு, இரட்டைப் பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளது. மேலும், ஐயாயிரம் பேர் இரட்டைப் பிரஜாவுரிமைக்காகக் காத்திருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!