பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் அமெரிக்க பாடகர் கைது!

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகர் கிறிஸ் பிரவுண், பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 29 வயதான கிறிஸ், பிரான்ஸில் பாரிஸ் பொலிஸாரால் நேற்று கைதுசெய்யப்பட்டார். அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக, நீதிமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. கிறிஸ்- உடன் அவரது நண்பர் மற்றும் மெய்ப்பாதுகாவலர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த ஜனவரி மாதம் 15ஆம் திகதி இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டுவிட்டு, விடுதியில் தங்கியிருந்தபோது துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக 24 வயதான யுவதியொருவர் அளித்த முறைப்பாட்டின் பிரகாரம் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

கடந்த 2009ஆம் ஆண்டு பாடகியும், தனது காதலியுமான ரைஹானாவை தாக்கிய குற்றச்சாட்டு கிறிஸ் மீது ஏற்கனவே பதிவுசெய்யப்பட்டுள்ளது. தாக்குதலின் பின்னர் வெளியான ரைஹானாவின் கோரமான முகம் கொண்ட ஒளிப்படம் வெளியாகி, உலகளவில் பேசப்பட்டது.

அதுமாத்திரமன்றி கடந்த 2016 ஆம் ஆண்டு பெண்ணொருவரை துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியதாக பிறவுண் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. எனினும், தன்மீதான குற்றச்சாட்டுக்களை பிரவுண் மறுத்துள்ளார். பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுகளுக்கு பிரான்ஸில் 15 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!