யாழ். பல்கலைக்கழகத்துக்குள் தாக்குதல்- ஊடகவியலாளரான மாணவன் படுகாயம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்துக்குள் நேற்று நண்பகல் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் ஊடகவியலாளரும், பல்கலைக்கழக மாணவருமான ப.சுஜீவன் படுகாயமடைந்தார். யாழ். பல்கலைக்கழக கலைப்பீட நான்காம் வருட மாணவர்கள் சிலரால் அவர் தாக்கப்பட்டார் என்று சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதலுக்குள்ளானவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். மாணவன் சுஜீவனுக்கும் நான்காம் வருட மாணவர்கள் சிலருக்கும் இடையே முறுகல் நிலை நீடித்தது. மாணவன் சுஜீவனை நேற்றுமுன்தினம் யாழ். பல்கலைக்கழக வளாகத்துக்குள் வெளியில் வைத்து பின்தொடர்ந்த நான்காம் வருட மாணவர்கள் சிலர், அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் செல்ல முற்பட்டிருந்தனர்.எனினும், வீதியில் பொதுமக்களின் போக்குவரத்து அதிகமாக இருந்த காரணத்தால் நான்காம் வருட மாணவர்கள் சிலரின் அந்த முயற்சி பயனளிக்கவில்லை.

இந்தநிலையில், நேற்று பல்கலைக்கழக வளாகத்துக்குள் அந்த மாணவனைச் சூழ்ந்த நான்காம் வருட மாணவர்கள் சிலர் அவர் மீது சரமாரியாகத் தாக்குதலை நடத்தினர்.சம்பவத்தில் மாணவன் சுஜீவன் தலைப் பகுதியில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!