கொலைகார ராஜபக்ச கும்பல் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் அரசியல் தீர்வை வழங்க முன்வராது. கடந்தகால அனுபவங்களில் இருந்து தமிழ் மக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இதை உணர்ந்து விட்டார்கள் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச கடந்த செவ்வாய்க்கிழமை தமிழ்ப் பத்திரிகை ஆசிரியர்களைச் சந்தித்திருந்தார். இதன்போது, இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளை கூட்டமைப்பே குழப்பியது என்றும், எதிர்காலத்தில் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்களுடன் பேச்சு நடத்தி தீர்வை வழங்குவேன் என்றும் கூறியிருந்தார். இது தொடர்பில்கருத்து வெளியிட்டுள்ள சரத் பொன்சேகா –
‘மீண்டும் ஆட்சியைப் பிடித்து பிரதமர் ஆசனத்தில் அமர்ந்திருக்கவும் தனது சகோதரர்களில் ஒருவரை ஜனாதிபதியாக்கவுமே மகிந்த ராஜபக்ச விரும்புகின்றார். இதற்கு தமிழர் தரப்பின் பேராதரவு அவருக்குத் தேவைப்படுகின்றது. இதற்காகவே தமிழர் மனதை வெல்லும் வகையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மீது வீண்பழியைச் சுமத்தும் வகையிலும் அவர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
சுமார் பத்து வருடங்கள் ஆட்சியில் இருந்தவர் மகிந்த ராஜபக்ச. அவருக்கு தமிழர் மீது உண்மையான அக்கறை இருந்திருந்தால் அப்போதே தீர்வை வழங்கியிருக்கலாம்.
நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டபோது வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எனக்கு அமோக வாக்குகளை அளித்தனர். ஆனால், அந்த வாக்கு வீதத்தில் இருபது வீத வாக்குகளைக்கூட வடக்கு, கிழக்கில் அன்று மகிந்த பெறவில்லை.
2010ஆம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் 2015ஆம் ஆண்டு தேர்தல் மாதிரி நீதியாக நடந்திருந்தால் நான் ஜனாதிபதியாகியிருப்பேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க என்னை நம்பி வாக்களித்த தமிழ் மக்களிடம் நான் தீர்வுத் திட்டத்தை முன்வைத்து உரிய தீர்வை வழங்கியிருப்பேன் என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!