தேசிய அரசாங்கத்தை ஏற்க முடியாது! – மனோ கணேசன்

தேசிய அரசாங்கத்தை கொள்கையளவில் தான் எப்போதுமே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். மாத்தளையில் நேற்று இடம்பெற்ற நடமாடும் சேவை நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“தேசிய அரசாங்கமென்பது உண்மையில் நல்ல விடயம்தான். ஆனால் இலங்கை போன்றதொரு நாட்டிற்கு இந்த தேசிய அரசாங்க முறைமை பொருத்தமானதா என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தான் நாம் 2015 ஆம் ஆண்டில் ஜனாதிபதி சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை இணைத்து நல்லாட்சிக்கான தேசிய அரசாங்கம் ஒன்றினை உருவாக்கினோம். ஆனால் இன்று அந்த அரசாங்கத்தினது நிலமை தலைகீழாக மாறியிருக்கின்றது. நாங்கள் பொறுப்புடன் உருவாக்கிய அந்த தேசிய அரசாங்கம் இன்று அதாள பாதாளத்தில் விழுந்து இருக்கின்றது.

முன்னேற்றமடைந்த நாடுகளில் அதாவது அறிவும் இதயமும் வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த தேசிய அரசாங்கமென்பது சாத்தியப்பாடானதொரு விடயமாகும். நாட்டை நேசிக்காமல் தனது பதவியையும் தனது குடும்பத்தையும் மட்டுமே எண்ணிச் செயற்படும் அரசியல்வாதிகளே எமது நாட்டில் இருக்கின்றார்கள். எனவேதான் நான் எமது நாட்டிற்கு தேசிய அரசாங்கம் என்பது பொருத்தமற்றது என கூறுகின்றேன்” என அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!