தேசிய அரசாங்கமே தேசிய ஒருமைப்பாட்டுக்கு தீர்வாக அமையும் -ரங்கே பண்டார

பல்வேறு தரப்பினர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ள நிலையில் அதற்கு ஏற்றவகையில் தேசிய ஒருமைப்பாடும் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு தேசிய அரசாங்கமே தீர்வாக அமையும் என ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கேபண்டார தெரிவித்தார்.

தேசிய அரசாங்கத்தை அமைப்பதிலும் வரவு – செலவுத்திட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதிலும் எழுந்துள்ள சவால் தன்மை குறித்தும், இவை குறித்த கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் வினவியபோதே அவர் இதனை குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

தேசிய கொள்கைகளை ஒன்றுசேர்க்கும் விதத்தில் உருவாக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்துக்கான பெரும்பான்மை ஆதரவினை நிச்சயமாக பெற்றுக்கொள்வோம்.

கடந்த காலத்தை போல் அல்லாமல் சிறந்த தேசிய அரசு ஒன்று கட்டியெழுப்புவதுடன் வரவு – செலவுத் திட்டத்திற்கான பெரும்பான்மை பலத்தையும் பெற்று, தேசிய அரசாங்கத்தின் உறுதித்தன்மையினை நிலைநாட்டுவோம்.

கடந்த ஏழு தசாப்தங்களில் நாம் இனப்பிரச்சினை, பிரதேசவாத பிரச்சினையென பல்வேறு சவால்களை எதிர்கொண்டிருந்தோம். நாட்டில் தற்போது இனப்பிரச்சினையோ பிரதேச பிரச்சினையோ இல்லை.

வடக்கு மற்றும் தெற்கை சேர்ந்த மக்கள் ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வுடன் வாழ்கின்றனர். இந் நிலை கடந்த மூன்றரை வருடங்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த நல்லாட்சி அரசாங்கத்தின் தேசிய கொள்கைகளினூடாகவே பெற்றுக்கொண்டோம்.

இந்நிலையினை கட்டியெழுப்பும் நோக்கிலும் தேசிய ஒற்றுமையை பாதுகாத்து கொள்வதற்காகவுமே மீண்டும் தேசிய அரசாங்கத்தை உருவாக்க தீர்மானித்தோம்.

பல்வேறு தரப்பினர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட முன்வந்துள்ள நிலையில் அதற்கு ஏற்றவகையில் தேசிய ஒருமைப்பாடும் உருவாக்கப்பட வேண்டும். இதற்கு தேசிய அரசாங்கமே தீர்வாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!