தலைமன்னார், காங்கேசனில் இருந்து விரைவில் தமிழ்நாட்டுக்கு கப்பல் சேவை!

தலைமன்னாரில் இருந்தும், காங்கேசன்துறையில் இருந்து தமிழ் நாட்டுக்கான கப்பல் சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

‘நான் இந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய பின் முதன் முதலாக இப்பகுதிக்கு வருகை தந்துள்ளேன். வியாழக்கிழமை நான் யாழ்ப்பாணத்துக்குச் சென்று நேற்று வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு வருகை தந்தேன். நான் மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்தி விடயமாக கலந்தாலோசிக்க வந்துள்ளேன். இந்த மக்கள் எனக்கு தந்த ஆதரவை நான் ஒருபோதும் மறக்கமுடியாது.

ஆகவே நான் இந்த நாட்டின் வட பகுதிக்கான அபிவிருத்திக்காக ஈடுபடுத்துவதோடு எம் மத்தியில் ஒற்றுமையான சகோதரத்துவத்தை கட்டியெழுப்புவதற்கான முயற்ச்சியை மேற்கொள்வேன் என்பதை இந்த சந்தர்ப்பத்திலே கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

ஆகவே நாம் அனைவரும் இந்த நாட்டிலே ஒற்றுமையுடன் ஒரே எண்ணம் கொண்டவர்களாக இருக்கின்றோம். இதற்காக அமைச்சர் றிசாட் பாரிய உதவியை புரிந்தமைக்கு நான் அவருக்கு எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். இப்பொழுது நமக்கு இருக்கின்ற பிரச்சனை இந்த நாட்டை நாம் அபிவிருத்தியில் முன்நோக்கி கொண்டு செல்ல வேண்டியுள்ளது. ஆகவேதான் இந்த நாட்டிலுள்ள வடக்கையும் எப்படி அபிவிருத்தி செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து வருகின்றோம்.

யாழ்ப்பாணம் இந்த நாட்டிலே ஒரு முக்கியமான பிரதேசம். யுத்தத்துக்கு பின் வடக்கு பகுதியை நாங்கள் அபிவிருத்தி செய்ய வேண்டியுள்ளது. தெற்கு பகுதியை நாங்கள் அபிவிருத்தி செய்வதற்காக கப்பல் துறையை அபிவிருத்தி செய்கின்றோம். இத் துறையையும் தொழில் துறையையும் நாங்கள் அபிவிருத்தி செய்வதற்கு பல அர்ப்பணிப்புக்களை செய்து வருகின்றோம். இதற்காக நாங்கள் அதிகமான பணத்தை செலவிட்டு வருகின்றோம். இதற்காக பெற்றக் கடனை சீர் செய்வதற்கு நாங்கள் நேர்மையான முறையில் செயட்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது.

நாங்கள் எப்படி தென்பகுதியை அபிவிருத்தி செய்கின்றோமோ அவ்வாறு யாழ்ப்பாணத்தையும் மன்னாரையும் இந்த வட மாகாணம் முழுவதையும் அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றோம். பலாலி விமான நிலையத்தை நாங்கள் பாரிய விமான நிலையமாக மாற்றி இந்த நாட்டின் ஒரு முக்கிய விமான நிலையமாக மாற்றுவதற்கு இருக்கின்றோம். காங்கேசன் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து றிசாட் பதியுதீனின் அமைச்சின் தொழில் நிறுவனமான சீமெந்து தொழிற்சாலையை அபிவிருத்தி செய்ய திட்டங்கள் தீட்டி வருகின்றோம்.

ஆகவே நாங்கள் அவ்விடத்தை ஒரு தொழில் அமைக்கும் கிராமமாகவும் சுற்றுலா பயணிகளுக்கான ஒரு இடமாகவும் அமைக்க இருக்கின்றோம். நாங்கள் தலைமன்னாரிலிருந்து தமிழ் நாட்டுக்கான கப்பல் சேவையையும் காங்கேசன் துறையிலிருந்து தமிழ் நாட்டுக்கான கப்பல் சேவைகளை நடாத்த இருக்கின்றோம் என்ற நற்செய்தியை உங்களுக்கு இவ்விடத்தில் கூறிக்கொள்ளுகின்றோம்.

தலைமன்னார் துறைமுகத்தை நாங்கள் மக்கள் போக்குவரத்துக்கு மட்டுமல்லாமல் அதை ஒரு சிறந்த கைத்தொழில் மையமாக அமைப்பதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். நாங்கள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு மன்னார் வவுனியா திருகோணமலைகளுக்கான பாரிய அபிவிருத்திகளை செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வேன் என்பதை தெரிவித்துக் கொள்ளகின்றேன்.

நாங்கள் யாழ்ப்பாணத்தை அபிவிருத்தி செய்வதனூடாக சுற்றுலா துறையை மேம்படுத்தும் ஒர் இடமாக மாற்றுவோம். தம்புள்ள பகுதி மக்கள் கட்டுநாயக்காவை பயன்படுத்துவதைவிட பலாலி விமான நிலையத்தை பயன்படுத்தும் நிலையை உருவாக்குவோம். நாங்கள் அமைச்சர் றிசாட்டுடன் கலந்தாலோசித்துள்ளோம் மன்னாரை ஒரு சுற்றுல்லா மையமாக அமைப்பதற்கு. மன்னார் கோட்டையை நாங்கள் அபிவிருத்தி செய்வதற்காக நடவடிக்கை எடுத்துள்ளோம். மன்னார் பூநகரி பிரதேசங்களில் நாங்கள் மீனவ கிராமங்களை அமைத்து மீன்பிடியையும் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்ய இருக்கின்றோம்.

படகுகள் மூலமாக மன்னாரிலிருந்து காங்கேசன்துறைக்கும் இங்கிருந்து யாழ்ப்பாணத்துக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் சுற்றுல்லா துறையை மேம்படுத்தும் திட்டங்களையும் நாங்கள் மேற்கொள்ள இருக்கின்றோம். நான் எனது அதிகாரிகளுக்கு இன்று மன்னார் மாவட்ட மீனவர்களுக்கான பாரிய திட்டத்தை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுள்ளேன்.

சிறந்த கடல் வளம் கொண்ட இப் பிரதேசத்தை நன்கு அபிவிருத்தி கொண்ட மாவட்டமாக இந்த நாட்டின் அபிவிருத்தியின் ஒரு பங்காளி மாவட்டமாக மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள நான் பணித்துள்ளேன்.இப்பகுதியிலுள்ள விவசாய குளங்களை அபிவிருத்தி செய்ய இருக்கின்றோம். இவ்வாறு மன்னார் பகுதியில் பனை, தென்னை அபிவிருத்திகளை முன்னெடுக்க இருக்கின்றோம்.

இந்த ஆண்டுக்குள் 1300 வீட்டுத் திட்டங்களை மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ள இருக்கின்றோம். அத்துடன் அடுத்த ஆண்டும் இதற்கு மேலாக வீட்டுத்திடங்களை வழங்க இருக்கின்றோம். தற்பொழுது இராணுவம் பிடித்து வைத்திருக்கின்ற காணிகளை இன்னும் அதிகமாக விடுவிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும்.

பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புக்களை வழங்கவிருக்கின்றேன். எதிர்வருகின்ற மாதத்திலே எங்களது அபிவிருத்திகளை நீங்கள் காண்பீர்கள். அதன் பின் உங்களுக்கு தெரியவரும் எங்களது அபிவிருத்தி திட்டங்களைப் பற்றி என பிரதமர் மேலும் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!