ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு மன்னிப்பு கேட்க இங்கிலாந்து முடிவு!

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில், 1919-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி, பஞ்சாப் மாநிலம் ஜாலியன்வாலாபாக்கில் நூற்றுக்கணக்கான அப்பாவி இந்தியர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நடந்து 100 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி, இதன் நினைவு தினத்தை அனுசரிப்பதற்காக, இங்கிலாந்தில் ஜாலியன்வாலாபாக் நூற்றாண்டு நினைவு குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த நூற்றாண்டையொட்டி, இங்கிலாந்து அரசு முறையாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரதமர் தெரசா மேவுக்கு இந்திய வம்சாவளி எம்.பி.க்கள் 2 பேர் கடிதம் எழுதி உள்ளனர்.

இந்நிலையில், இந்த படுகொலையின் நூற்றாண்டு நினைவு தினம் என்ற தலைப்பில் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது. அதிலும், மன்னிப்பு கோரிக்கை எழுந்தது. இதற்கு பதில் அளித்த இங்கிலாந்து மந்திரி பரோனஸ் அன்னபெல் கோல்டி, மன்னிப்பு கோருவதற்கு நூற்றாண்டு நினைவு தினமே உகந்த நேரம் என்று இங்கிலாந்து வெளியுறவு மந்திரி ஏற்கனவே கூறியிருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும், நூற்றாண்டு நினைவு தினத்தை கவுரவமான முறையில் அனுசரிக்கப் போவதாகவும் அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!