பொறுப்புடன் பேச வேண்டும் – ஐதேகவினருக்கு ரணில் கண்டிப்பு!

அமைச்சர்கள், இராஜாங்க, பிரதியமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கருத்துக்களைக் கூறும்போது பொறுப்புடன், இருக்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். கட்சியின் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்தின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கொக்கெயின் பயன்படுத்துவதாக, நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்திருந்த கருத்துகள் தொடர்பில், ​கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

ஏனைய கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் தொடர்பில் செயற்படுவதற்கு தனக்கு அதிகார​மில்லையெனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தேவை​யேற்படின், இரகசியப் பொலிஸாரின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, அரசாங்கம் என்ற வகையில் செயற்பட முடியுமெனத் தெரிவித்துள்ளார்.

செயற்குழுவில், மிகவும் உணர்ச்சி வசப்பட்டு கருத்துரைத்த இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, “தனக்கு, 7 இலட்சம் விருப்பத்தைக் கொண்டிருப்போர், தன்னுடைய பேஸ்புக்கில் உள்ளனர். ஆகையால், தான் தெரிவித்திருக்கும் கருத்துகள் தொடர்பில், பிரபல்யமான அரசியல் என்ற வகையில், கவனஞ் செலுத்துமாறு” கேட்டுக்கொண்டார் .

பிரதமர் மட்டுமன்றி, ஏனைய சிரேஷ்lட உறுப்பினர்களும், கருத்துகளைக் கூறும் போது, பொறுப்புடன் கூறுவது தொடர்பிலான கருத்துகளை முன்வைத்தனர் . இந்நிலையில், உணர்ச்சிவசப்பட்டு கருத்துரைத்த, இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, செயற்குழுக் கூட்டத்திலிருந்து உடனடியாக வெளியேறுவதற்கு முயற்சித்தாரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!