மன்னாரில் மீட்கப்பட்ட எலும்புகள் 1499 – 1719 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டவை

மன்னார் நகர நுழைவாயிலில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்டு, அமெரிக்காவில் கார்பன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்ட ஆறு எலும்புக் கூடுகளும், 1499 – 1719 ஆண்டுகளுக்கிடையில் புதைக்கப்பட்டவை என்று தெரியவந்துள்ளது.

மன்னார் மனித புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட 335 மனித எலும்புக்கூடுகளில், 6 எலும்புக்கூடுகளின் மாதிரிகள் தெரிவு செய்யப்பட்டு, புளோரிடாவில் உள்ள பீட்டா ஆய்வகத்தில் றேடியோ கார்பன் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டன.

இந்த மாதிரிகளின் பரிசோதனை அறிக்கை மன்னார் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதற்கமைய, இந்த ஆறு எலும்பு மாதிரிகளும் 1499 – 1719 ஆண்டுகளுக்கிடையில் புதைக்கப்பட்டவை என்று கண்டறியப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புதைகுழி அகழ்வைத் தொடருவதா நிறுத்துவதா என்று இன்னமும் முடிவு செய்யப்படவில்லை என்றும், முடிவு எடுக்கப்படும் வரையில் அகழ்வுப் பணி முன்னெடுக்கப்படும் என்றும் சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!