சிறிலங்கா நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட ஜெனிவா தீர்மான வரைவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்கா தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு நேற்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

பிரித்தானியா, அயர்லாந்து, கனடா, ஜேர்மனி, மொன்ரெனிக்ரோ, மசிடோனியா ஆகிய ஆறு நாடுகள் இணைந்து, சிறிலங்கா தொடர்பான தீர்மான வரைவை, பேரவைச் செயலகத்தில் சமர்ப்பித்துள்ளன.

இந்த வரைவுக்கு இணை அனுசரணை வழங்க சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளது.

இந்த நிலையில், ஜெனிவா தீர்மான வரைவை, அரசாங்கத்தின் சார்பில் அவை முதல்வர் லக்ஸ்மன் கி்ரியெல்ல நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதன் பின்னர் உரையாற்றிய அவர், “இது சிறிலங்காவுக்கு சாதகமான நல்லதொரு தீர்மானம்.

இதில் திருத்தம் செய்வதற்கு சிலர் ஏற் முற்படுகின்றனர் என்று எனக்குத் தெரிய வேண்டும்.

எதற்காக இந்த வரைவை மாற்ற வேண்டும் என்று மகிந்த சமரசிங்கவிடம் கேட்கிறேன்.

நாங்கள் எமது பொறுப்புகளை உணர்ந்து கொள்ள வேண்டும். நிறைவேற்று அதிகாரத்துக்கு, பொறுப்புகள் உள்ளன.

அதுபோல, நாடாளுமன்றத்தில் எமக்குப் பொறுப்புகள் உள்ளன. நீதிமன்றத்துக்கும் பொறுப்புகள் இருக்கின்றன.

அதேவேளை, எமக்கான எல்லைகளை நாம் தெரிந்திருக்க வேண்டும். சிறிலங்கா அதிபர் தமது எல்லையை புரிந்து கொள்ள வேண்டும்.

நாங்கள் ஒருவருக்கு ஒருவர் விரலை நீட்டினால், குழப்பம் தான் ஏற்படும்.

சிறிலங்கா அதிபர் தனது வரம்புகளை அறியவில்லை. நாங்கள் தான் அவரை அதிபராக்கினோம். ஆனால் தாம் தோற்கடித்தவரைரை அவர் பிரதமர் ஆக்கினார்.

அது மக்களின் ஆணைக்கு எதிரானது” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!