யாழ். நகரில் சுவரொட்டிகளை ஒட்ட தடை! – யாழ். மேயர் உத்தரவு

யாழ்.நகரப் பகுதியில் பொது இடங்களில் விளம்பரங்களை ஒட்டுவதற்கு முற்றாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் அறிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையில் நேற்றுக் காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“தனியார் அல்லது அரச நிறுவனங்கள், அரசியல் சார்ந்த கட்சிகள், திரையரங்குகள், கல்வி நிறுவனங்கள் போன்ற எந்த நிறுவனங்களாக இருந்தாலும் அவர்கள் சார்ந்த விளம்பரங்களை பொது மக்களுடைய மதில்கள், சுவர்கள், அரச திணைக்களங்களில் சுவர்களிலோ, பொது இடங்களிலோ ஒட்டுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் அனைத்தும் இதுவரை காலமும் பொறுப்பற்ற விதத்தில் தாங்கள் நினைத்த படி பொது மக்களின் சுவர்களில் பசைகளை பூசி விளம்பரங்களை ஒட்டி வந்தார்கள்.

இனிவரும் நாட்களில் இவ்வாறு யாழ்.நகரத்தை அசுத்தப்படுத்த அனுமதிக்க முடியாது. சுத்தமான பசுமையான நகரை உருவாக்க இவ்வாறான அதிரடி நடவடிக்கைகளை மாநகர சபை மேற்கொள்ளும். முக்கியமாக தேர்தல் காலங்களிலும் இந்த நடவடிக்கை கடுமையான முறையில் அமுல்படுத்தப்படும். இவ்வாறு விளம்பரப்படுத்த தேவையானவர்கள் மாநகர சபையுடன் தொடர்பு கொண்டால் அதற்கேற்ற நடவடிக்கை சபையால் ஏற்படுத்திக் கொடுக்கப்படும்” என யாழ்.மாநகர முதல்வர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!