மன்னார் புதைகுழியில் இருந்து, மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பான துறைசார்ந்த அறிக்கைகளை மூன்று மாதங்களுக்குள் பெற்றுக் கொள்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற இரண்டு மணித்தியால கலந்துரையாடலின் பின்னர் மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் நீதிவான் ரி.சரவணராஜா, களனி பல்கலைக்கழக பேராசிரியர் சோமதேவ, காணாமல் ஆக்கப்பட்டோர் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ், காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் மன்றில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.நிரஞ்சன், மன்னார் தடயவியல் பொலிஸார், புதைகுழி அகழ்வுக்குப் பொறுப்பான சட்டமருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச, குருநாகல் மற்றும் புத்தளம் சட்ட மருத்துவ அதிகாரிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
புதைகுழியைப் பாதுகாத்தல், பொலிஸ் பாதுகாப்பு வழங்கல், மீட்கப்பட்ட மனித எச்சங்களை உரிய முறையில் பாதுகாத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.
புதைகுழி அகழ்வின் போது மீட்கப்பட்ட தடயப் பொருள்கள் தொடர்பான துறைசார்ந்த பெறுபேற்று அறிக்கைகளை எதிர்வரும் 3 மாதங்களுக்குள் சம்மந்தப்பட்ட தரப்புக்களிடமிருந்து பெற்றுக் கொள்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் தடயப் பொருள்களை ஆய்வுக்காக பல்கலைக்கழகத்துக்கு எடுத்துச் செல்வதற்கு நீதிமன்றின் அனுமதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டுள்ளது. இந்த அறிக்கைகளின் அடிப்படையில் எதிர்கால நகர்வுகள் தீர்மானிக்கப்படவுள்ளன.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!