மருத்துவ பீட மாணவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் ; ஹிருனிகா

மருந்து மாபியாவை கட்டுப்படுத்தியது போல் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மற்றும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் என்பவற்றையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.

இவர்களின் நடவடிக்கையால் அதிகமான மாணவிகள் வைத்தியப் பயிற்சியை பெற்றுக்கொள்ள முடியாமல் இருகின்றனர் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று புதன் கிழமை இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

தனியார் வைத்திய துறையில் பட்டம் பெற்ற பல மாணவிகள் இலங்கை மருத்துவ சபையில் பதிவு செய்ய முடியாமல் நிர்க்கதியான நிலையில் இருக்கின்றனர். சைட்டம் கல்லுரியில் பட்டம் பெற்ற காரணத்தினாலே அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இவர்களை பதிவு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கு ஜனாதிபதியும் ஆதரவளித்து வருகின்றார். இந்த மாணவர்களை பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு தீர்ப்பு வந்த பின்னர் இவர்கள் ஜனாதிபதியை சந்தித்து, இந்த மாணவர்கள் கொத்தலாவள பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்ற பின்னர் பதிவு செய்யவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர்.

அத்துடன் உயர் தரத்தில் எனது பெறுபேறுகள் போதுமானதாக இல்லாத காரணத்தினால் சட்டக்கல்லூரியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் வெளிநாட்டு பல்கலைக், கல்லூரியில் படித்து பட்டம் பெற்றேன். அதனால் எமது பணம் வெளிநாட்டுக்கு சென்றது. ஆனால் இந்த மாணவர்கள் எமது நாட்டிலே படித்து பட்டம் பெற்றுள்ளனர். அதனால் எமது அன்னியச்செலாவணி பாதுகாக்கப்பட்டிருக்கின்றது. எனவே இந்த மாணவர்களுக்கு நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!