மாநாகர சபையில் ஆட்சியமைத்து இரு வாரங்களே ஆகும் நிலையில் ஊழல் நடந்துவிட்டது என்று நினைக்கும் வகையில் சிறுபிள்ளைத்தனமாக நடப் பதை விடுத்து மக்களுக்கு ஆற்ற வேண்டிய சேவைகளில் பங்களிப்புச் செய்யுங்கள்.
இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.
யாழ்ப்பாணம் மாநகர சபை மேயர் இ.ஆர்னோல்ட்டுக்கு பாசையூர் மக்கள் சார்பாக நேற்று மதிப்பளிக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பாசையூர் சென். அன்ரனிஸ் விளையாட்டு மைதானத்தில் நடந்த இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் தெரிவித்தாவது-,
உள்ளுராட்சி சபைத் தேர்தல் காலத்தில் சபைகளைக் கைப்பற்ற பலத்த போட்டிகள் இருந்தக. ஆனால் தேர்தல் முடிந்த பின்னரும் அதில் சிலர் குறிவைகின்றனர். அதிலும் யாழ்ப்பாணம் மாநகர சபையைக் குறி வைக்கின்றனர். தேர்தலில் குறிவைப்பது ஜனநாயக முறை எனலாம். ஆனால் தேர்தல் முடிந்த பின்னரும் குறிவைப்பது ஜனநாயகம் அல்ல.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மேயர் பதவியை ஏற்று இரண்டு வாரத்திலேயே ஊழல் செய்துவிட்டார் என சிலர் கடிதங்கள் கொடுக்கின்றனர். பதவி ஏற்றவுடனேயே ஊழல் செய்யக் கூடிய சிறப்பான ஆற்றல் படைத்தவர் என்பதை எம்மால் ஏற்க முடியாது. சிலர் அவ்வாறு நினைக்கும்படி சிறுபிள்ளைத்தனமாக செயற்படுகின்றனர்.
இனியாவது சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகளில் இருந்து விலகி மக்களுக்கு ஆற்றுகின்ற சேவையில் பங்களிப்புக்களை கொடுத்தால் உங்களுக்கும் நல்லது என்பதை இந்த இடத்தில் இருந்து கூறிக்கொள்கின்றேன்.
மாநகர முதல்வரை கால்தடங்கள் போட்டு வீழ்த்தி விடலாம் என்று கனவு காணாதீர்கள். ஏனெனில் அவர் ஒரு சிறந்த கால்பந்தாட்ட வீரர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அனைவரும் இணைந்து விளையாடுங்கள். ஓரணியாக இணைந்து விளையாடுங்கள். மக்களுக்கான பணிகளை செய்யுங்கள்.
நாம் தேசிய அரசில் நாளை என்ன நடக்கும் எதிர்வரும் 10 ஆம் திகதி என்ன நடக்கும் என்ற சூழலில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.பொறுப்புக்களை சுமந்து செல்லுகின்ற எமக்கு பொதுமக்களின் ஆதரவு தொடர்ந்து தேவை.- என்றார்.
இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராஜா, மாநகர சபையின் கூட்டமைப்பு உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!