உச்சநீதிமன்றிடம் கருத்து கேட்பதில் ஐதேகவுக்கு ஆட்சேபனை இல்லை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிகாலத்தை எந்த திகதியிலிருந்து கணிப்பிடுவது என்பது தொடர்பில் உயர்நீதிமன்றத்தின் அபிப்பிராயத்தை அவர் பெற்றுக்கொள்வதில் ஐக்கிய தேசிய கட்சிக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என அமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்தார்.

அத்துடன் அத்தகைய அபிப்பிராயத்தை பெறுவதற்கு உயர் நீதிமன்றத்தை நாடுவதற்கு முன்னதாக புதிய பிரதம நீதியரசர் நியமிக்கப்பட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளராக தயாசிறி தயாசேகர கூறியிருப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவித்தார்.

டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

நடைமுறையில் உள்ள அரசியலமைப்பின் பிரகாரம் நிச்சயமாக 2020 ஜனவரி மாதம் 8 ஆம் திகதியுடன் ஜனாதிபதியின் பதவிக்காலம் நிறைவுக்கு வருகின்றது. ஆனால் இது குறித்து நீதிமன்ற ஆலோசனையை நாடுவது ஜனாதிபதியின் உரிமையாக கருதப்படுவதுடன் அது நாட்டின் எதிர்காலத்துக்கு ஏற்புடையதாகவும் அமையும்.

மேலும் ஜனாதிபதி தேர்தலை கண்டு தற்போது சுதந்திர கட்சி பின்வாங்குவதையும் அதற்கான வியூகங்களை வகுப்பதையும் காண கூடியதாக உள்ளது. ஆனால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிச்சயமாக தோல்வியடையும் அதேவேளை எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி புதிய ஜனாதிபதியொருவர் பொறுப்பேற்பார் என்றும் குறிப்பிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!