யாழ். ஊடகவியலாளர் தயாபரன் படுகாயம் – உந்துருளி விபத்து குறித்து விசாரணை

யாழ்-புத்தூரில், உந்துருளி விபத்தில் படுகாயமடைந்த ஊடகவியலாளர் ஆர்.தயாபரன், யாழ். போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முற்பகல், 10.30 மணியளவில், உடுப்பிட்டியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, புத்தூர் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் காயமடைந்த ஊடகவியலாளர் தயாபரன் நினைவிழந்த நிலையில், அச்சுவேலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் யாழ். போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஊடகவியலாளர் தயாபரனின் உந்துருளிக்குப் பின்னால் வந்த உந்துருளி ஒன்று அவரை மோதி விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இது திட்டமிட்ட விபத்தா என்ற கோணத்தில் காவல்துறை விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

நேற்றிரவு யாழ். போதனா மருத்துவமனையில் ஊடகவியலாளர் தயாபரனை பார்வையிட்ட வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், இந்த விபத்து திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்டதா என்று விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு, காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!