குண்டு நிபுணர்கள் கொல்லப்பட்டு விட்டனர் – இனி யாரும் இல்லை என்கிறது காவல்துறை

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய – குண்டு தயாரிக்கும் நிபுணர்கள் இருவரும், அந்த தாக்குதல்களில் கொல்லப்பட்டு விட்டனர் என்று சிறிலங்கா பதில் காவல்துறை மா அதிபராக சந்தன விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் முப்படைகளின் தளபதிகளுடன் இணைந்து நடத்திய செய்தியாளர் சந்திப்பில், கருத்து வெளியிட்ட அவர்,

“தாக்குதல்களில் ஈடுபட்ட குழுவில் இரண்டு குண்டு தயாரிக்கும் நிபுணர்களே இருந்தனர். அவர்கள் இரண்டு பேரும் இப்போது இறந்து விட்டனர்.

எதிர்கால தாக்குதல்களுக்காக அவர்கள் வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்தனர். அவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இந்த தாக்குதல்களில் நேரடியாக ஈடுபட்ட அனைத்து சந்தேக நபர்களும் இறந்து விட்டனர் அல்லது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முப்படைகளுடன் இணைந்து சிறிலங்கா காவல்துறை பொதுமக்களைப் பாதுகாக்க, குறிப்பாக பாடசாலைகளில், கூட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளது.

மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், விழிப்புணர்வு மற்றும் பரப்புரைகளை முன்னெடுக்கிறோம். இதனால் பாடசாலைகள் தாக்கப்படும் என்று அர்த்தமில்லை.

இது ஒரு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாத்திரம் தான்.” என்றும் அவர் தெரிவித்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!