தீவிரவாத அச்சுறுத்தலை முறியடிக்க உதவத் தயார் – சீனா உயர் அரசியல் ஆலோசகர்

சீனாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர் வாங் யாங் நேற்று பீஜிங்கில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.

சீன மக்கள் அரசியல் ஆலோசனை கலந்துரையாடல் தேசிய குழுவின் தலைவரான வாங், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு சீனா உறுதியான ஆதரவை வழங்கும் என்று இந்தச் சந்திப்பின் போது, தெரிவித்தார்.

சிறிலங்காவுடன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு சீனா தயாராக இருப்பதாகவும், தீவிரவாத அச்சுறுத்தலை ஒன்றிணைந்து எதிர்ப்பதற்கு தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.

பல்வேறு துறைகளில் நட்புறவு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும், மூலோபாய ஒத்துழைப்பை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்வதற்கும் சீனா தயாராக இருக்கிறது என்றும் வாங் யாங் குறிப்பிட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!