வடக்கு – கிழக்கில் நீண்டகாலமாகவுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காணாமல் இலங்கையில் எந்தவொரு பிரச்சினையையும் தீர்த்துவிட முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் நேற்று தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்க உரை மீதான சபை ஒத்திவைப்புவேளை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய இரா.சம்பந்தன், “ வடக்கு, கிழக்கில் நிலவும் மிகமுக்கிய அரசியல், பொருளாதார ரீதியிலான பிரச்சினைகளுக்கு கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் உரியவகையில் தீர்வுகள் காணப்படவில்லை. இந்தப் பிரச்சினைகள் உரிய வகையில் தீர்க்கப்படும் வரை நாட்டுக்கு மீட்சி இருக்காது. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒன்றுபடுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவும், அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்வதற்காகவும் வடக்கு, கிழக்குப் பிரச்சினை தொடரவேண்டும் என்பதே சிலரின் விருப்பமாக இருக்கின்றது. பிரிக்கப்படாத நாட்டுக்குள் சகல குடிமக்களும் சமவுரிமையுடன் வாழும் வகையில் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படவேண்டும் என்பதே எமது விருப்பமாகும்.
அரசமைப்பின் ஊடாக உரிமைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டும். புதிய அரசமைப்பை உருவாக்கும் நோக்கில் அமைக்கப்பட்ட அரசமைப்பு நிர்ணய சபையின் செயற்பாடுகள் கடந்த சில மாதங்களாக இடம்பெறவில்லை. தேர்தல், கட்சி மாற்றம் உள்ளிட்ட காரணிகளால் இவை நடக்கவில்லை.
எனினும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக அதன் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவேண்டும். முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் 2015ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் புதிய அரசமைப்பு தயாரிக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய அரசமைப்பானது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படுவதுடன், பொது வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டும் என்பதே அவருடைய நிலைப்பாடாக உள்ளது. இதனால்தான் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால் இந்த அரசமைப்பு மறுசீரமைப்புப் பணிகளை எதிர்க்கமுடியாதுள்ளது. இந்த நிலைப்பாட்டிலேயே நாங்களும் இருக்கின்றோம்.
கடந்த 30 ஆண்டுகளாக புதிய அரசமைப்புத் தயாரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்னும் தொடர்ந்தும் வருகின்றது. பிளவுபடாத, பிரிக்கமுடியாத நாட்டுக்குள் தமிழ் மக்களும் சமமான குடிமக்களாக வாழக்கூடிய வகையிலான தீர்வொன்றையே எதிர்பார்க்கின்றோம். இது புதிய அரசமைப்பின் ஊடாக வழங்கப்பட வேண்டும். இதனை எவரும் மறுக்க முடியாது.
ஏனைய நாடுகள் முன்னேறிச் செல்வதற்கு அரசமைப்புக்கள் உதவியதைப்போன்று எமது நாட்டுக்கும் புதிதான அரசமைப்பு தயாரிக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!