வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னுடனான சந்திப்புத் தொடர்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நாளை அறிவிக்கவுள்ளார். சிலவேளைகளில் இன்றும் இந்த அறிவிப்பு வெளிவர வாய்ப்புள்ளது என்று பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
கொரியத் தீபகற்பப் போரால் கொரிய நாடுகள் இரண்டாகப் பிளவடைந்தன. வடகொரியா – தென்கொரியா இடையில் கடந்த 1953ஆம் ஆண்டில் இருந்தே நேரடி மற்றும் மறைமுக மோதல்கள் இருந்து வந்தன.
ஆனால் இந்த வருடம் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் தொடரில் வடகொரியா பங்கேற்றமையை அடுத்து கொரிய நாடுகள் தமக்குள் நட்புப் பாராட்ட ஆரம்பித்துள்ளன. தொடர்ந்து ஏற்பட்ட அடுத்தடுத்த மாற்றங்கள் ஆறு தசாப்த காலப் போரை அப்படியே புரட்டிப்போட்டுள்ளன.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் – தென்கொரிய அதிபர் மூன் ஜெ இன் இடையிலான சந்திப்பும் அண்மையில் இடம்பெற்றது. இதையடுத்து கிம் ஜோங் உன் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இடையிலான சந்திப்பும் விரைவில் இடம்பெறவுள்ளது.
அடுத்த இரண்டு வாரங்களுக்குள் இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்று கருதப்படுகிறது. எனினும் எப்போது, எங்குவைத்து இந்தச் சந்திப்பு இடம்பெறும் என்று எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. இந்த நிலையில் இது தொடர்பான அறிவிப்புக்களை ட்ரம்ப் நாளை வெளியிடவுள்ளார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!