கூரையைப் பிரித்துக்கொண்டு வீட்டுக்குள் புகுந்த விமானம்

அமெரிக்காவில் விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் ஒன்று அங்கிருந்த வீட்டின் மேற்கூரையை உடைத்து வீட்டுக்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்காவின் கனெக்டிக் மாகாணத்தில் உள்ள டைன்பரி நகரில் பற்றரியில் இயங்கும் கிளைடர் ரக சிறிய விமானம் ஒன்று நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது விமானத்தில் பற்றரியின் மின்சக்தி திடீரென தீர்ந்தது. இதனால் விமானத்தை அங்குள்ள குடியிருப்பு பகுதியில் அவசரமாக தரையிறக்க விமானி முயற்சி செய்தார்.

ஆனால், அவரது கட்டுப்பாட்டை இழந்த குறித்த விமானம் அங்கிருந்த வீடு ஒன்றின் மேற்கூரை மீது மோதி வீட்டின் மேற்கூரை உடைந்து விமானத்தின் முக்கால்வாசி பகுதி வீட்டுக்குள் விழுந்தது.

இதில் விமானிக்கும், வீட்டு உரிமையாளரான பெண் மற்றும் அவரது 2 மகள்களுக்கும் லேசான காயங்கள் ஏற்பட்டன. விமானம் வேகமாக வந்து மோதியதில் குண்டு வெடித்தது போல பலத்த சத்தம் கேட்டதால் அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த 4 பேரையும் மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பொலிஸார் மற்றும் மத்திய விமான போக்குவரத்து நிர்வாகம் வீட்டுக்குள் விழுந்த கிளைடர் விமானத்தை கிரேன் மூலம் மீட்டனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வெளிநாட்டு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!