மைத்திரி தலைமையில் சுதந்திரக்கட்சி அரசாங்கம் அமைக்கப்படும் – மஹிந்த அமரவீர

ஐக்கிய தேசியக் கட்சியுடனோ அல்லது வேறு எந்த அணியுடனோ இணைந்து அடுத்த ஆட்சியை அமைக்கப் போவதில்லை. மாறாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசாங்கமே அமைக்கப்படும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

அரச நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.

சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களின் மனங்களை வெற்றிகொண்ட தலைவர் என்ற அடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மாத்திரமே ஜனநாயக ஆட்சியினை முன்னெடுத்து செல்ல முடியும்.

தேசிய அரசாங்கத்தில் இருந்து வெளியேறியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 16 உறுப்பினர்களும் வேறு எந்தக் கட்சியுடனும் இணைந்து செயற்படப் போவதில்லை. அவர்கள் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியுடன் இணைந்தே தீர்மானங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் எமக்கு உறுதியளித்துள்ளனர்.

நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து செயற்படவுள்ளதாக கூறுகின்றனர். ஆனால் நாம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமைத்துவத்தின் கீழ் இத்தனை காலமாக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டும் வருகின்றோம். ஒரே கொள்கையில் இத்தனை காலமாக செயற்பட்ட காரணத்தினால் தான் மக்கள் எம்மை ஆதரித்து வருகின்றனர்.

ஆகவே இனியும் அரசியல் இலாபங்களுக்காக நாம் கட்சி மாற வேண்டும் என்ற நிலைப்பாடு ஏற்படப்போவதில்லை. நாம் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையவும் மாட்டோம் அதேபோல் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் இணையவும் மாட்டோம். நாம் இறுதி வரையில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாகவே செயற்படுவோம் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!