பிரதேச சபை மாநகரசபையாக மாற முடியுமெனில் கல்முனைக்கு ஏன் தடை? – சுரேஸ்

பிரதேச சபையை ஒரே இரவில் மாநகரசபையாக தரம் உயர்த்த முடியுமென்றால் 35 வருடகாலமாக கோரி வருகின்ற பிரதேச செயலகத்தை ஏன் தரம் உயர்த்த முடியாது எனக் கேள்வி எழுப்பியுள்ளார் ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். யாழ்ப்பாணத்தில் அவரது இல்லத்தில் நடத்திய அவசர ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தார்.

கல்முனையிலுள்ள உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரம் உயர்த்துமாறு கோரி போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த 35 வருடங்களாக முன்வைக்கப்பட்டு வருகின்ற இக் கோரிக்கைகள் முஸ்லிம் தலைமைகள் அல்லது முஸ்லிம் மக்களின் எதிர்ப்புக்களால் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்திருக்கின்றது.

இவ்வாறு முஸ்லிம் தரப்புக்களின் அழுத்தம் காரணமாக அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பாரியளவிலான போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. தமிழ் மக்களின் காணிகளை ஆக்கிரமித்தும் அபகரித்தும் முஸ்லிம் குடியேற்றங்கள் அல்லது கிராமங்களை உருவாக்குவதற்காகவே முஸ்லிம் தரப்புக்கள் இதற்குத் தடையாக இருக்கின்றன.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் பல இடங்களிலுமான 21 தமிழ்க் கிராமங்கள் முஸ்லிம் கிராமமாக மாறியிருக்கின்றது. இவ்வாறு கிராமங்களை மாற்றியும் காணிகளை ஆக்கிரமித்தும், மதத் தலங்களை அகற்றியும் முஸ்லிம் குடியேற்றங்களைச் செய்து பள்ளிவாசல்களைக் கட்டியிருப்பதாக முன்னாள் அமைச்சரும் ஆளுநருமான ஹிஸ்புல்லா ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றார்.

இதனால் தமிழ் மக்கள் அதிகம் வாழக்கூடிய இந்தப் பிரதேசத்தில் உள்ள உப அலுவலகத்தை பிரதேச செயலகமாக தரம் உயர்த்த விடாமல் முஸ்லிம்கள் தடுக்கின்றனர். ஆனால் முஸ்லிம் மக்களுக்காக புதிய புதிய கிராமங்கள், பிரதேச செயலகங்கள், பிரதேச சபைகள் எல்லாம் உருவாக்கப்பட்டு வந்திருக்கின்றன. ஆனால் தமிழ் மக்களுக்காக அவை எதனையும் செய்ய முடியாது என்று அவர்கள் தடுக்கின்றனர்.

இதனைச் சுட்டிக்காட்டி அல்லது கண்டித்துப் பேசினால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக தமிழ்த் தரப்புக்கள் சித்தரிக்கப்படுகின்றனர். முஸ்லிம் தலைமைகள் ஒரு இரவில் செய்ய முடியுமென்றால் 35 வருடமாக தமிழ் மக்கள் கோரி வருவதை ஏன் செய்ய முடியாமல் இருக்கின்றது. ஆக இதற்குரிய நடவடிக்கை எடுப்பதற்கு காலம் வேண்டுமென பிரதமர் கூறியிருப்பதாக கூட்டமைப்பினர் தற்போது கூறுகின்றனர்.

இதற்கு காலம் தேவையில்லை. அரசாங்கம் நினைத்தால் உடனடியாகச் செய்யலாம். எனவே உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் விரைவாக முன்னெடுக்க வேண்டும். இதற்கான அழுத்தங்களை அல்லது குரல்களை கூட்டமைப்பினர் கொடுக்க வேண்டும். வெறுமனே பார்வையாளர்களாக இருப்பதை கூட்டமைப்பினர் தவிர்த்துக் கொள்ள வேண்டும். இந்த நிலையில் அரசாங்கம் காலதாமதம் இல்லாமல் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்தும்படி எமது கட்சி கேட்டுக்கொள்கிறது.

ஆனால் நடைமுறையில் இருந்த ஒன்றை தரம் உயர்த்த கூட்டமைப்பு தலைமை காத்திரமான முடிவை எடுக்க தயங்குவதையும் முஸ்லிம் மக்கள் தங்களுக்கு எதிராக வருவார்கள் என்ற அச்சம் காரணமாக எதனையும் செய்யாமல் இருப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதற்கான காத்திரமான நடவடிக்கைகளை அனைவரும் மேற்கொண்டு பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!