எமது இன அடையாளங்களை ஏற்றுக் கொள்ளாமல், சிங்கள மக்களின் அடையாளங்களையே இந்த நாட்டின் – தேசத்தின் அடையாளமாக அரச தலைவர் மைத்திரியின் உரை குறிப்பிடுகின்றது. எமது இன அடையாளங்கள் இந்தத் தேசத்துக்கு உரியது என்பது ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் நாம் இந்த நாட்டின் குடிமக்கள் அல்லர் என்று சுட்டிக்காட்டப்படுகின்றது என்றே நாம் கருத வேண்டியுள்ளது. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் கொள்கை விளக்க உரை மீதான விவாதத் தில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
மக்களின் ஆணை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் இனப் பிரச்சினைத் தொடர்பாக திட்டவட்டதுமானதும் நிரந்தரமானதும் சாதாரண சட்டங்களால் மாற்றப்பட முடியாததுமான தீர்வைப் பெறுவதற்கான ஆணையை எமது மக்களிடம் கோரியிருந்தோம். அவர்களும் எமக்கு ஆமோகமான ஆதரவை வழங்கி ஆணை வழங்கியிருந்தனர். எமது மக்களின் ஏற்றுக் கொள்ளப்பட்ட பிரதிநிதிகள் என்ற வகையில் நாம் அந்தக் கட்டளைகளை எந்தக் காரணம் கொண்டும் மீறமுடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள்.
கூட்டு அரசைச் சேர்ந்தவர்களும் மக்களுக்கு பலவிதமான வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். அதில் புதிய அரசமைப்பை உருவாக்குவதன் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறையை இல்லாமற் செய்வது விகிதாசார தேர்தல் முறையை மாற்றுவது நிலையான சமாதானத்தை ஏற்படுவதற்கு இனப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பது என்பன முக்கியமானவையாகும். நாடாளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு நீண்டவிவாதங்களின் பின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இடைக்கால அறிக்கையில் திருப்தியில்லை
இடைக்கால அறிக்கை முற்றுமுழுதாக தமிழ் மக்களின் வேணவாக்களை நிறைவு செய்யாத போதிலும் நாம் அதை சில திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளத் தயாராகவிருந்தோம். நாம் ஒன்றிணைந்த பிரிக்கப்படாத பிரிக்கப்படமுடியாத நாட்டுக்குள் உள்ளக சுயநிர்ணயம் கூடிய அதி உச்ச அதிகார பகிர்வு என்ற அடிப்படையில் உத்தேச அரசமைப்புக்கு எங்கள் ஆதரவைத் தருவதாக மீண்டும் மீண்டும் உறுதியளித்திருந்தோம்.
எமது மக்களால் ஏற்றுக்கொள்ளப்படாத பௌத்தத்துக்கு முன்னுரிமை என்ற கோட்பாட்டுக்குகூட நாம் எமது எதிர்ப்பை தெரிவிக்கவில்லை. இதுபோன்ற சில விட்டுக்கொடுப்புக்களை நாம் புதிய அரசமைப்பின் மூலம் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் நோக்கத்துடன் மேற்கொண்டோம். விட்டுக்கொடுப்புகள் காரணமாக கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாம் பெரும் பின்னடைவை சந்தித்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.
நாம் எதிர்க்கட்சியாக இருந்தபோதிலும் வரவு – செலவுத்திட்டங்கள் முதல் கொண்டு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சகல தீர்மானங்களுக்கு நாம் ஆதரவை வழங்கினோம். ஒரு நல்லிணக்க நடைமுறையூடாக எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் இனப் பிரச்சினைத் தீர்வை பெற்றுக்கொள்ளும் நோக்குடனேயே எங்களின் ஆதரவு அரசுக்கு வழங்கப்பட்டது.
அரச தலைவரால் முன்வைக்கப்பட்ட கொள்கை விளக்கவுரையில் புதிய அரசமைப்புத் தொடர்பாகவோ உள்ளூராட்சி சபைத் தேர்தல்களின்போது தேக்கமடைந்த அதன் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாகவோ எந்தவித கருத்துக்களும் முன்வைக்கப்படவில்லை. நாம் கடந்த மூன்று ஆண்டுகளும் கூட்டு அரசினால் தொடர்ந்து ஏமாற்றப்பட்டுவந்தோமோ என்ற கேள்வியை எங்களுள் எழுப்புகிறது. அரச தலைவரின் அறிக்கையில் கூறப்பட்ட இரு விடயங்கள் இனப்பிரச்சினைத் தீர்வு என்பது திசை திருப்பப்பட்டுவிட்டதோ என்ற கேள்வியை உருவாக்க தவறவில்லை.
எமது கலாசாரத்தை புறமொதுக்கல்
தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் சமூக கலாசார துறைகளை உறுதி செய்வது என்று குறிப்பிட்ட அறிக்கை அதையடுத்து நாட்டின் பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்களின் கலாசார உரிமைகளை பலப்படுத்தி உறுதிசெய்து தேசத்தின் அடையாளமாக வலுப்படுத்துதல் என்பது கவனிக்கப்படவேண்டிய விடயமாகும். பௌத்தத்துக்கு முதலிடம் என்று ஏற்கனவே முன்வைக்கப்பட்ட கோட்பாட்டைவிட இது மேலும் வலிமைவாய்ந்ததாக காணப்படுகிறது.
பெரும்பான்மை சமூகமான சிங்கள மக்களின் கலாசார உரிமைகளை பலப்படுத்தி உறுதி செய்து தேசத்தின் அடையாளமாக வலுப்படுத்துதல் என்பது சிங்கள மக்களின் கலாசாரத்தை மட்டுமே இலங்கை என்ற தேசத்தின் அடையாளமாக வெளிப்படுத்துவதை இந்த வார்த்தைகள் வெளிப்படுத்துகின்றன. இன்னும் சொல்லப் போனால் தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் கலாசார உரிமைகள் இந்த தேசத்தின் அடையாளங்களாக ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பது அந்த வரிகள் மூலம் முன்வைக்கப்படுகின்றன.
இப்படியான திட்டமிட்ட நடைமுறைகளை தமிழர்களோ முஸ்லிம்களோ மலையக மக்களோ ஏற்றுக்கொள்ளப்போவது இல்லை என்பதை இங்கு ஆணித்தரமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். எமது இன அடையாளங்கள் இந்த தேசத்துக்கு உரியது என்பது ஏற்றுக் கொள்ளப்படாவிட்டால் நாம் இந்த நாட்டின் குடிமக்கள் அல்லர் என சுட்டிக்காட்டப்படுகின்றது என்றே நாம் கருத வேண்டியுள்ளது.
மாகாண சபை முறைமை
தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க மாகாணசபை முறைமை மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உண்மையிலேயே நியாயமான முறையில் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைகளை ஏற்றுக்கொண்டு ஆளுநரின் எதேச்சதிகாரமான அதிகாரங்களை நீக்கி கொழும்பு அரசின் தலையீடுகளை தவிர்த்து மாகாணசபை முறைமை வலுப்படுத்தப்படுமாயின் அது ஒரு நல்ல விடயம்தான். ஆனால், 13ஆவது அரசமைப்புச் சட்டத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட வடக்கு – கிழக்கு இணைப்பு மாகாணசபைக்கான பொலிஸ் காணி அதிகாரம் என்பன பறிக்கப்பட்டு மாகாண சபைகள் வலு இழந்துபோய் கிடக்கின்றன.
கண்துடைப்பு
நியதிச் சட்டங்களைக்கூட நிறைவேற்றினாலும் அவற்றை நடைமுறைக்கு கொண்டு வரமுடியாத நிலையே நிலவுகிறது. ஏற்கனவே உரித்தான அதிகாரங்கள் பறிக்கப்பட்ட மாகாண சபைகளை வலுப்படுத்துவது என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ் மக்களையும் ஏமாற்றும் வெறும் கண்துடைப்பு என்றே நம்புகிறேன்.
புதிய அரசமைப்பின் மூலம் இனப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு கண்டு நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலை தவிர்க்கப்படுவதற்கான முன் முயற்சியே மாகாண சபைகளை வலுப்படுத்துவது என்ற போலி முன்வைப்பாகும். புதிய அரசமைப்பை கிடப்பில் போடும் திட்டத்தின் இன்னுமொரு அங்கமே 20ஆவது அரசமைப்பை நிறைவேற்றி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட அரச தலைவர் முறையை நீக்குவது என்றும் கருதவேண்டியுள்ளது.
அரச தலைவரால் முன்வைக்கப்பட்ட விளக்க அறிக்கை தமிழ் மக்களுக்கு எந்தவித நம்பிக்கையூட்டவில்லை என்பதையும் இருக்கும் நம்பிக்கையை பலவீனப்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது என்பதையும் நான் இங்கு மனவருத்தத்துடன் தெரிவிப்பதுடன் தொடர்ந்து தமிழ் மக்களின் வேணவாக்கள் புறக்கணிக்கப்படுமாயின் வீதிகளில் இறங்கி எமது மக்களுடன் இணைந்து எமக்கு மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஜனநாயக வழியில் போராடவேண்டிய நிலை ஏற்படும் – என்றார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!