பிரதமர் த.தே. கூ. ஏமாற்றும் செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார் – அடைக்கலநாதன்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எல்லோரையும் ஏமாற்றுகின்ற செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

வவுனியா பாலமோட்டையில் அவரது விசேட நிதியில் அமைக்கப்பட்ட சனசமூக நிலைய கட்டடத்தினை திறந்துவைத்ததன் பின்னர் ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கல்முனை பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்தும் செயற்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு முழுமையாக செயற்பட்டிருந்தது.

ஆனால் குறித்த விடயத்தில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் எல்லோரையும் ஏமாற்றுகின்ற செயற்பாட்டை முன்னெடுத்துள்ளார்.

எமது பேச்சுக்களின் ஊடாக ஒரு கணக்காளரை நியமிப்பதற்கான கடிதங்களை தற்போதைய அமைச்சராக இருப்பவர் அரச அதிபருக்கு அனுப்பி அதனை நடைமுறைப்படுத்தும் நிலை காணப்படும் போது மீண்டும் அதனை ரத்துச்செய்கின்ற செயற்பாட்டை செய்திருக்கின்றனர்.

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக கொண்டிருக்கின்ற அரசாங்கம் கூடுதலாக முஸ்லிம் அமைச்சர்களையும் பாராளுமன்ற உறுப்பினர்களையுமே நம்புவதாக எனது கணிப்பில் தெரிகின்றது. அவர்கள் அமைச்சரவையிலிருக்கின்ற காரணத்தால் அவ்வாறு இருக்கலாம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுவான நோக்கம் அரசியல் தீர்வு கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் மிக ஆளுமையோடு செயற்படும். அதே நேரத்தில் கல்முனை பிரதேச செயலகத்தினை தரம் உயர்த்துவதில் முழுமையாக செயற்பட்டிருந்தோம். தற்போது காலம் கனிந்திருக்கிறது. அந்த வகையில் நாம் ஒட்டுமொத்தமாக ஒரு முடிவுக்கு வரவேண்டும். அதாவது கல்முனை விடயம் மட்டுமல்ல எமது அரசியல் தீர்வு விடயமாகவும் சிந்திக்க வேண்டும்.

அது நம்பிக்கை இல்லா தீர்மானம் வருகின்ற போது இந்த அரசாங்கத்தோடு எவ்வாறு செயற்படவேண்டும் என்பது தொடர்பில் முடிவெடுக்கவேண்டும். அந்த முடிவை அறிவிக்க வேண்டும். இந்த விடயங்களின் ஊடாக சில விடயங்களை நாம் சாதிக்கலாம் என எண்ணுகின்றேன். இந் நிலையில் பிரதமராக இருக்கலாம் ஜனாபதிபதியாக இருக்கலாம் தமிழ் தரப்பினர் தம்மோடு இணைய மாட்டார்கள் என்ற சந்தேகத்தோடு செயற்படுகின்றனர்.

நாங்கள் இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியதே அரசியல் தீர்வை பெற்றுக்கொள்வதற் கேயாகும். கடந்த வரவு செலவுத்திட்டத்திலும் நான் கல்முனை விடயம் மற்றும் அரசியல் தீர்வு விடயத்தை அரசாங்கம் கவனத்தில் எடுக்காமையால் நடுநிலைமை வகித்திருந்தேன். தமிழ் தேசியக் கூட்டமைப்பிலும் நான் மட்டுமே இந்த முடிவை எடுத்து செயற்பட்டவன்.

ஆகவே இனியாவது நாங்கள் சந்தர்ப்பங்களை பயன்படுத்தவேண்டும். ஏற்கெனவே சில விடயங்களில் நாம் ஏமாற்றப்பட்டிருந்தாலும் தற்போது இருக்கின்ற சந்தர்ப்பத்தினையும் பயன்படுத்தாது விட்டால் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது நம்பிக்கையற்றுப்போகும் வாய்ப்பு முழுமையாக ஏற்படும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!