பொய் சொன்னாரா ரணில்?

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் குறித்து சாட்சியம் வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு உத்தியோகபூர்வ அழைப்போ அல்லது திகதியோ வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை தெரிவுக்குழுவில் சாட்சியம் வழங்க அழைக்க வேண்டுமென எதிர்க்கட்சி உள்ளிட்ட சில தரப்புகள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், நேற்று விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட பிரதமர், தாக்குதல்கள் குறித்து எம்மிடம் மறைப்பதற்கு எதுவுமில்லை. அது குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு தனக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்திருந்தார்.

அத்தோடு, தான் தெரிவுக்குழுவில் முன்னிலையாகி தனக்குத் தெரிந்த தகவல்களை வழங்குவேன் என்றும், தெரிவுக்குழுவின் ஊடாக உண்மைகளை வெளிக்கொண்டு வருவோம் என்றும் அவ்வறிக்கையில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையிலேயே தெரிவிக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்குமாறு பிரதமருக்கு அழைப்பு விடுக்கவில்லையென நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் சாட்சியம் வழங்குவதற்கு இதுவரையில் அழைப்பு விடுக்கவில்லையென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!