விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடியும்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரிக்கும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகளை இன்னும் ஒரு மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

புலனாய்வு அதிகாரிகளின் புகைப்படங்களை வெளியிடாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ள சரத் பொன்சேகா, பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் புலனாய்வு அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் என்றால் அது தொடர்பில் பொதுமக்கள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சாட்சியங்களை பெற்றுக்கொள்வதற்காக பிரதமர், ஜனாதிபதி மற்றும் சட்ட ஒழுங்கு அமைச்சின் முன்னாள் அமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், இவர்களின் சாட்சிகள் மிகவும் பெறுமதியானவை என்றும் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.

சாட்சியமளித்த பின்னர் மீண்டும் தெரிவுக்குழுவுக்கு அழைக்கப்பட அவசியமானவர்கள் உள்ளதாக தெரிவித்த சரத் பொன்சேகா, எவ்வாறாயினும் மக்களுக்கு உண்மையினை அறிந்துகொள்ளும் அவசியம் உள்ளதாகவும், பொறுப்புக்கூற வேண்டியவர்கள் யார் என்பது தொடர்பில் வெளிப்படுத்த முடியும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!