யாழ். குடாநாட்டில் பாதுகாப்பு அதிகரிப்பு

மானிப்பாயில் நேற்று முன்தினம் இரவு சிறிலங்கா காவல்துறையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, யாழ். குடாநாட்டில் நேற்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

மானிப்பாய்- இணுவில் வீதியில், சுதுமலை வடக்குப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 8.45 மணியளவில், சிறிலங்கா காவல்துறையினர் மறித்த போது, நிற்காமல் சென்ற உந்துருளிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்து.

இதில், கொடிகாமம், கச்சாயை சேர்ந்த 23 வயதுடைய செல்வரத்தினம் கவிகஜன் என்ற இளைஞன் பலியானார். இவரது சடலம் யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டு உறவினர்களால் அடையாளம் காணப்பட்டது.

அதையடுத்து, உடற்கூற்றாய்வுப் பரிசோதனைகளுக்குப் பின்னர் நேற்று மாலை சடலம் ஒப்படைக்கப்பட்டது.

கொல்லப்பட்ட இளைஞன் ஆவா எனப்படும் வாள்வெட்டுக் குழுவைச் சேர்ந்தவர் என சிறிலங்கா காவல்துறை கூறியுள்ளது.

இந்தச் சம்பவத்தை அடுத்து நேற்று யாழ். குடாநாட்டில் பல்வேறு பகுதிகளிலும், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

சிறிலங்கா காவல்துறை, சிறப்பு அதிரடிப்படையினர் வீதிக் காவல் நடவடிக்கைகளிலும், சுற்றுக்காவல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!