இந்தியாவுக்கு கப்பலில் தப்பிவந்த மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் சிக்கினார்!

மாலத்தீவை சேர்ந்த முராய்ப் என்பவருக்கு சொந்தமான ‘விர்கோ-9’ என்ற இழுவை கப்பல் கருங்கல் ஏற்றிக்கொண்டு கடந்த 11-ந்தேதி தூத்துக் குடியில் இருந்து மாலத்தீவுக்கு புறப்பட்டு சென்றது. மங்கோலியா நாட்டில் பதிவு செய்யப்பட்ட அந்த இழுவை கப்பலில் இந்தோனேசியாவைச் சேர்ந்த விவின்குணவான் (வயது 38) என்பவர் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். தலைமை அதிகாரி களாக இந்தோனேசியாவைச் சேர்ந்த ஷலாகுதீன் மாஸ்வாதி (27), இக்ரா பாஸ்ரி (32) ஆகியோரும் உள்ளனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த போஸ்கோ நிக்கோலஸ் பிரிட்டோ (49) உள்பட சிலர் அந்த கப்பலில் மாலுமிகளாக இருந்தனர். இந்த இழுவை கப்பல் மாலி துறைமுகத்துக்கு சென்று சரக்கை இறக்கியது. பின்னர் அங்கிருந்து கடந்த 27-ந்தேதி மீண்டும் 9 மாலுமிகளுடன் தூத்துக்குடிக்கு புறப்பட்டு வந்தது. இந்த கப்பல் சிறிது தூரம் வந்தபோது, வேறு ஒரு மர்மநபர் அந்த கப்பலில் ஏறி உள்ளார். இதற்கு கப்பலில் இருந்த இந்தோனேசிய ஊழியர்கள் சிலர் உதவியாக இருந்துள்ளனர்.

இந்த நிலையில் அந்த கப்பலில் இருந்த தமிழகத்தைச் சேர்ந்த போஸ்கோ நிக்கோலஸ் பிரிட்டோ, புதிதாக ஒரு நபர் இழுவை கப்பலில் ஏறி இருப்பதால் பிரச்சினை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கருதினார். இதனால் அவர் இழுவை கப்பலின் உரிமையாளரான முராய்ப்புக்கு தகவல் தெரிவித்தார். உடனே முராய்ப், தனது கப்பலுக்கு சரக்கு ஏற்றி அனுப்பும், தூத்துக்குடியில் உள்ள தனியார் ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனத்தை தொடர்பு கொண்டு அந்த தகவலை தெரிவித்தார். இதையடுத்து அந்த நிறுவனத்தினர் தூத்துக்குடி கடலோர காவல்படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், நேற்று இந்திய கடலோர காவல்படை ரோந்து கப்பல்கள் விரைந்து சென்றன. தூத்துக்குடி நோக்கி சர்வதேச கடல் எல்லையில் வந்து கொண்டு இருந்த விர்கோ-9 இழுவை கப்பலை வழிமறித்தனர். அதன்பிறகு கடலோர காவல்படை அதிகாரிகள் கப்பலுக்குள் சென்று சோதனை நடத்தினர். அப்போது 9 மாலுமிகளுக்கு பதிலாக 10 பேர் இருப்பது தெரியவந்தது. உடனடியாக கடலோர காவல்படையினர் அந்த கப்பலை சிறைபிடித்து தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு மத்திய உளவுப்பிரிவு அதிகாரிகள், ரா உளவுப்பிரிவு அதிகாரிகள், கடலோர காவல்படை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

முன்னாள் துணை அதிபர்

விசாரணையில், கப்பலில் 10-வதாக இருந்த நபர் மாலத்தீவின் முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் என்பது தெரியவந்தது. இதனால் உஷாரான உளவுப்பிரிவு அதிகாரிகள், அவரிடம் துருவி, துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். அகமது ஆதீப் எப்படி கப்பலில் ஏறினார்? அவருக்கு உதவி செய்தவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

அகமது ஆதீப் கடந்த 2015-ம் ஆண்டு மாலத்தீவு துணை அதிபராக இருந்தார். 28-9-2015 அன்று அப்போதைய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் என்பவரை விரைவுப்படகில் வெடிகுண்டு வைத்து கொலை செய்ய முயற்சி நடந்தது. இதில் அப்துல்லா யாமீன் எந்தவித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதே நேரத்தில் படகில் இருந்த அவருடைய மனைவி, மகள் ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர்.

பரபரப்பு

இந்த வழக்கில் துணை அதிபராக இருந்த அகமது ஆதீப் கடந்த 24-10-2015 அன்று கைது செய்யப்பட்டார். இதையடுத்து 5-11-2015 அன்று அவர் துணை அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் அவர் ஜெயிலில் அடைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இந்த வழக்கில் அகமது ஆதீப்புக்கு தண்டனை வழங்கப்பட்டது. அதே நேரத்தில் அரசியல் ரீதியாக அந்த தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பதாக கருத்து எழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த மே மாதம் இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க கோர்ட்டு உத்தரவிட்டது. இந்த நிலையில் இந்தியாவுக்கு தப்பி வந்த அவர் தூத்துக்குடியில் சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிகாரிகள் விசாரணை

அகமது ஆதீப்பிடம் உளவுத்துறை அதிகாரிகள் நேற்று இரவு வரை தொடர்ந்து விசாரணை நடத்தினர். இந்த பிரச்சினை குறித்து டெல்லியில் உள்ள இந்திய வெளிவிவகாரத்துறை அதிகாரிகள் கூறும்போது, “மாலத்தீவு முன்னாள் துணை அதிபர் அகமது ஆதீப் இந்தியாவுக்குள் வருவதற்கு உரிய ஆவணங்கள் எதுவும் கொண்டுவரவில்லை. மேலும் இந்தியாவுக்குள் நுழைவதற்கு அவர் சரியான வழியில் வரவில்லை”என்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!