ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக கட்சிகளின் விஞ்ஞாபனத்தின் அடிப்டையிலேயே ஆதரவு தெரிவிப்பது குறித்து தீர்மானிப்போம் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தவிசாளர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் அமைந்துள்ள தமிழீழ விடுதலை இயக்கத்தின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற தலைமைக்குழுவின் கூட்டத்தின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் எட்டாவது ஜனாதிபதித் தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெற இருக்கின்ற நிலையில், இது தொடர்பாக விரிவான கலந்துரையாடலை தமிழீழ விடுதலை இயக்கம் நேற்றைய தினம் ஐந்து மணி நேரத்திற்கு மேலாக நடத்தியது.
எனவே இந்த நாட்டில் ஏழு ஜனாதிபதித் தேர்தல் கடந்த நிலையிலும் தமிழ் மக்களுக்கான நிரந்தரமான தீர்வு எதுவும் கிடைக்கவில்லை. எது எவ்வாறு இருந்தாலும் ஈழத்தமிழ் மக்கள் தங்களுக்கு ஏதாவது கிடைக்குமா என்ற நிலையில் இத்தேர்தலை பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணப்பாடு இருக்கின்றது. எனவே இது தொடர்பாக தமிழீழ விடுதலை இயக்கம் இம்மாத இறுதிக்குள் மத்தியகுழு மற்றும் ஏனைய உறுப்பினர்களுடன் கலந்துரையாடி முடிவெடுக்க இருக்கின்றது.
பிரதான கட்சிகள் இரண்டு தமது வேட்பாளர்களை அறிவித்திருக்கின்றன. இந்த சூழ்நிலையில் அவர்களுடைய தேர்தல் அறிக்கையை பொறுத்துதான் எங்களுடைய தீர்மானத்தை இந்நாட்டு மக்களிற்கு பகிரங்கமாக தெரிவிக்க இருக்கின்றோம் என்றார்.
இதேவேளை, தமிழீழ விடுதலை இயக்கத்தினுடைய தீர்மானமானது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய தீர்மானமாக இருக்குமா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரை மூன்று கட்சிகள் இருக்கின்றன. அதில் ஒரு கட்சி எங்களுடைய கட்சியாகும். நாங்கள் எடுக்கின்ற தீர்மானத்தினை ஏனைய இரு கட்சிகளோடும் கலந்தாலோசித்து ஒரு இறுதித் தீர்மானத்திற்கு வருவோம். எனவே நாங்கள் எடுக்கின்ற தீர்மானத்திற்கு அவர்கள் சாதகமாக இருக்கப் போகின்றார்களா அல்லது எதிராக இருக்கப் போகின்றார்களா என்பதை காலம்தான் பதில் சொல்லும் என்றார்.
உங்களுடைய தீர்மானத்திற்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் இருக்குமேயானால், உங்களுடைய தீர்மானத்திலேயே உறுதியாக இருப்பீர்களா என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய மற்றுமொரு கேள்விக்கு பதிலளிக்கையில்,
இது தொடர்பாக நாங்கள் கருத்து தெரிவிக்கவில்லை. எங்களது எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக ஒவ்வொரு கட்டங்களிலும் ஊடக வாயிலாக தெரிந்து கொள்ள முடியும் என்றார்.
நீங்கள் எப்பொழுதுமே அரசாங்கத்தை குறை கூறுபவர்களாகவும் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குபவர்களை குற்றம் சாட்டுபவராகவும் இருக்கின்றீர்கள். ஆனால் உங்களுடைய கட்சியின் தலைவர் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவராகவும் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குபவராகவும் அரச சொத்துக்களை அனுபவிப்பவராகவும் இருந்து வருகின்ற வேளையில், ஒரே கட்சிக்குள் இருக்கின்ற நீங்கள் இருவரும் வெவ்வேறுபட்ட கருத்துக்களை கொண்டிருப்பதன் காரணம் என்ன என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய மற்றுமொரு கேள்விக்கு பதிலளிக்கையில்,
அவ்வாறு ஒன்றும் இல்லை. எங்களது கட்சியின் தீர்மானங்களை கட்சியினுடைய தலைவர் நிறைவேற்றி இருக்கின்றார். குறிப்பாக கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய மாநாட்டிலே இந்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்திற்கு ஆதரவளிப்பதில்லை என்பதனை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இரண்டாம் மூன்றாம் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விட்டதன் மூலம் கட்சி நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டு இருக்கின்றார்.
இன்னொரு விடயம் பிரதி குழுக்களின் தலைவர் என்பது அரசாங்கத்தினுடைய பதவியல்ல. 2004 ஆம் ஆண்டு நாங்கள் 22 பேர் பாராளுமன்றம் சென்ற போது பிரதமராக மஹிந்த ராஜபக் ஷ இருந்த பொழுது நாங்கள் வாக்களிப்பதன் மூலம் எங்களுடைய ஆதரவின் மூலம் எதிர்க்கட்சியினுடைய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டார்.
அந்த வகையில் செல் வம் அடைக்கலநாதன் இன்றைக்கும் எதிர்க் கட்சியின் ஆசனத்தில் இருப்பதன் மூலம் இது அரசாங்கத்தினுடைய பதவி அல்ல என்பது தெளிவாகின்றது எனவும் தெரிவித்தார்.
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!