அரச வங்கிகளை பாதுகாக்க அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது ; லக்ஸ்மன் யாப்பா கேள்வி

அரச வங்கிகளை தனியார் துறைக்கும், அரச பிணைமுறிகளை தனியாருக்கு வழங்கும் வகையில் அர வங்கி சட்டத்தில் திருத்தங்களை கொண்டுவர அரசாங்கம் முயற்சிகளை எடுப்பதாக அறிய முடிகின்றது. ஆகவே அரச வங்கிகளை பாதுகாக்க அரசாங்கம் என்ன செய்யப்போகின்றது என்பதை நிதி அமைச்சர் சபையில் தெளிவுபடுத்த வேண்டும் என எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை மக்கள் வங்கி திருத்த சட்டம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

இந்த அரசாங்கத்தின் காலத்தில் தனியார் துறை விடயங்கள் அதிகமாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் அரச வங்கிகளின் மீதான பார்வையும் திரும்பியுள்ளது. நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

ஆனால் அதற்காக அரச வங்கிகளை தனியார் மயப்படுத்த முடியாது. இப்போது மக்கள் வங்கி சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்போகின்ற நிலையில் பிணைமுறிகளை எவ்வாறு கையாளப்போகின்றது என்பதையும் அரச வங்கிகளை பாதுகாக்க என்ன செய்யப்போகின்றது என்பதையும் நிதி அமைச்சர் சபையில் தெளிவுபடுத்த வேண்டும்.

இப்போது கொண்டுவரும் புதிய சட்ட திருத்தங்கள் மூலமாக அமைச்சருக்கு அதிக தன்னிச்சை அதிகாரங்கள் வழங்கப்படுகின்றது. நிதி கையாள்கையில் அமைச்சருக்கு அதிகளவில் அதிகாரங்கள் அவசியமா? நிருவாகத்தை புறக்கணித்து அமைச்சுக்கு அதிகாரங்களை கொடுக்க வேண்டுமா. ஆகவே இது குறித்த முழுமையான தெளிவு எமக்கு வேண்டும்.

தனியார் துறைக்கு அரச வங்கி பிணைகளை விற்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் உண்மைத்தன்மை என்ன. அரச வங்கிகளை பாதுகாக்க நிதி அமைச்சர் கொடுக்கும் வாக்குறுதி என்ன என்பதை கூற வேண்டும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!