பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகையின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். எமது ஆட்சியில் குண்டுத்தாக்குதல் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு கடமையை தவறவிட்ட அனைவரும் சட்டத்தின் முன் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இந்த விடயம் குறித்து விசேட அறிக்கையினை வெளியிட்டுள்ள கோத்தாபய ராஜபக்ஷ அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில் கத்தோலிக்க ஆயர்கள் சபை மற்றும் பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கைகள் குறித்து கவனம் செலுத்தினேன். முழு நாடும் கவலை கொள்ளும் வகையில் இடம்பெற்ற இத்தாக்குதலினால் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வழங்கப்படாமையினால் மனம் வருந்திய நிலையிலே, பேராயர் அவ்வாறான கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர்கள் பின்னணியில் இருந்து சூழ்ச்சி செய்தவர்கள், அமைப்புக்கள் அதற்கு அனுசரணை வழங்கியவர்கள், தாக்குதலை தடுக்காது கடமையினை துஷ்பிரயோகம் செய்தவர்கள், சந்தேக நபர்களை கைது செய்யாத நிலை, சட்டத்தின் முன் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் விடுவிக்கப்பட்டமை போன்ற நிலைகளுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் சுயாதீனமான அதிகாரமிக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
அதேபோன்று எதிர்காலத்தில் இவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாத வகையில் முன்னெடுக்க கூடிய நடவடிக்கைகள் தொடர்பிலும் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். 30 வருட கால சிவில் யுத்தத்தை குறுகிய 3 வருட காலத்திற்குள் நிறைவிற்கு கொண்டு வந்தவர்கள் என்ற வகையில் முன்வைக்கப்படும் கோரிக்கைகளை புரிந்துகொள்ள முடிகின்றது. பேராயரின் கோரிக்கையினை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்பது பிரதான நிலைப்பாடாகும்.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் அவருடன் இணைந்து நாட்டில் யுத்தத்தை நிறைவு செய்து அச்சமின்றி வாழக் கூடிய சூழலை உருவாக்கினோம். அவ்வகையில் பேராயரின் சுயாதீன ஆணைக்குழு ஒன்றுக்கான நியாயமான கோரிக்கை எமது அரசாங்கத்தின்கீழ் நிறைவேற்றப்படும். அதே போன்று பயங்கரவாதம் மற்றும் அடிப்படைவாதம் அற்ற நாடொன்றை உருவாக்குவேன். நாட்டில் அச்சமற்ற சூழலை உருவாக்குவேன்
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!