பலாலி விமான நிலையத்தை மதிப்பீடு செய்ய வருகிறது இந்திய தொழில்நுட்ப குழு

பலாலி விமான நிலையத்தின் வசதிகள் தொடர்பான மதிப்பீடுகளைச் செய்வதற்கு, அடுத்த வாரம் இந்தியாவில் இருந்து தொழில்நுட்பக் குழுவொன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளதாக, கொழும்பிலுள்ள அதிகாரிகளை மேற்கோள்காட்டி ‘தி ஹிந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

பலாலியில் இருந்து இந்திய நகரங்களுக்கு விமான சேவைகளை ஆரம்பிக்க சிறிலங்கா சிவில் விமானப்போக்குவரத்து அதிகாரசபை மும்முரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒக்ரோபர் நடுப்பகுதியில் விமான சேவைகளை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

பலாலி விமான நிலையத்தில் இருந்து, கொச்சி, மும்பை, புதுடெல்லிக்கான சேவைகள் தொடங்கப்படவுள்ளன.

போக்குவரத்து மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் வழிகாட்டலின் கீழ் இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக, சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பலாலி விமான நிலையத்தின் வசதிகள் தொடர்பான மதிப்பீடுகளைச் செய்வதற்கு, அடுத்தவாரம் இந்தியாவில் இருந்து தொழில்நுட்பக் குழுவொன்று சிறிலங்காவுக்கு வரவுள்ளதாக, கொழும்பிலுள்ள அதிகாரிகளை தெரிவித்தனர்.

பலாலி விமான நிலையத்தை கூட்டாக அபிவிருததி செய்வதற்கு இந்தியாவிடம் இருந்து கொடை உதவிகள் கிடைப்பதற்கு சாத்தியங்கள் உள்ள போதிலும், அதுபற்றி கலந்துரையாடப்பட்ட போதிலும், எந்த அதிகாரபூர்வ உடன்பாடும் இதுவரை கையெழுத்திடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!